சாந்தி சுவரூப் பட்நாகர் (Sir Shanti Swaroop Bhatnagar) பிப்ரவரி 21, 1894ல் பஞ்சாப் மாகாணத்தின் (இன்றைய பாகிஸ்தான்) ஷாப்பூர் என்ற இடத்தில் பிறந்தார். குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்தார். சிக்கந்தராபாத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். லாகூர் ஃபோர்மன் கிறிஸ்தவக் கல்லூரியில் 1916ல் இயற்பியில் பி.எஸ்சி. பட்டமும், வேதியியலில் 1919ல் எம்.எஸ்சி. பட்டமும் பெற்றார். லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் டி.எஸ்சி. ஆய்வியல் பட்டம் பெற்றார். 1921-ல் நாடு திரும்பிய இவர், காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் வேதியியல் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு லாகூரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆய்வகத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். கூழ்மங்கள் (colloids), பால்மங்கள் (emulsions), தொழிலக வேதியியல் (industrial chemistry), காந்த வேதியியல் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். 1928-ம் ஆண்டு கே.என்.மாத்தூருடன் இணைந்து காந்தப் பண்புகளை (magnetic interference balance) அளவிடும் கருவியைக் கண்டறிந்தார். ‘லாகூரின் தந்தை’ எனப் போற்றப்பட்ட கங்காராம் அகர்வால், தன் கரும்பு ஆலைகளில் வீணாகும் சோகைகளை என்ன செய்வது என்று இவரிடம் ஆலோசனை கேட்டார். இவற்றைக்கொண்டு கால்நடைத் தீவனம் தயாரிக்கும் முறையை உருவாக்கினார். ஜவுளி ஆலைகள், மாவு அரவை ஆலைகள், எண்ணெய் ஆலைகள், எஃகு ஆலைகளின் பல்வேறு தொழிலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கண்டார். ராவல்பிண்டியில் இயங்கிய ஸ்டீல் பிரதர்ஸ் என்ற பெட்ரோலியத் துரப்பண நிறுவனம், தனது தொழிலகப் பிரச்சினைக்குத் தீர்வு கோரி இவரை நாடியது. இதற்கும் கூழ்ம வேதியியலின் உதவியால் தீர்வுகண்டார். 1935ல் சக விஞ்ஞானி கே.என்.மாத்தூருடன் இணைந்து, இவர் எழுதிய ‘ஃபிசிகல் பிரின்சிபல்ஸ்’ மற்றும் ‘அப்ளிகேஷன்ஸ் ஆஃப் கெமிஸ்ட்ரி’ என்ற நூல் இன்றும் அந்தத் துறையின் முதன்மை நூலாக விளங்குகிறது.
37
previous post
You must be logged in to post a comment.