வெயிலின் தாக்கம்: சேலத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சுவரில் ஆஃப்பாயில் போட முயன்றவர்களிடம் விசாரணை..!
சேலம் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகிவருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக 108 டிகிரி வரை சேலத்தில் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் யாரும் 12 மணியிலிருந்து 3 மணி வரை அவசியம் இல்லாமல் வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை பொதுமக்களுக்கு எடுத்து கூறும் வகையில் சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான பிரபாகரன் என்பவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இருக்கக்கூடிய நினைவு சின்னம் முன்பு முட்டையை கொண்டு ஆஃப்பாயில் போட முயற்சித்தார்.
இதனை கண்ட சேலம் காவல் ஆய்வாளர் சுரேஷ் பாபு கண்ணா இதற்கு முறையான அனுமதி பெற்றிருக்கிறீர்களா?. பொது இடத்தில் இவ்வாறு கூட்டத்தை கூட்டி ஆஃப்பாயில் போட முயற்சித்திருக்கிறீர்கள் என்று கூறி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் எந்த பதிலும் கூறாமல் இருந்ததால் அவர்களை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.