வத்தலக்குண்டு அருகே போலி பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் அதிரடி கைது! மேலும் வழக்கறிஞர் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா எம் வாடிப்பட்டியில் குடியிருந்து வருபவர் சேவுகம்பட்டி திமுக நகரச் செயலாளர் தங்கராஜ். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு அமலோற்பவம் என்பவரிடம் நிலத்தை கிரயமாக பெற்று விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது நிலத்தை இவருக்கு தெரியாமலேயே அவருடைய பட்டா எண்ணை பதிந்து போலி பத்திரம் மூலம் அய்யம்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவண பதிவேற்றம் செய்துள்ளனர். இது தொடர்பாக தங்கராஜ் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து போலி ஆவணங்கள் தயாரித்து ஆவண பதிவேற்றம் செய்த பெலிக்ஸ் மார்ட்டின், நெல்சன், அருள், ஜெசிந்தா மேரி, சத்திய செல்வி, அனிதா ராஜ், கிறிஸ்டி கெவின் மைக்கேல், கிறிஸ்டோபர் சாமுவேல், முருகானந்தம், தருண்குமார், பெரியசாமி, ராஜ் பரத் மற்றும் போலி ஆவணம் தயார் செய்த நிலக்கோட்டை வழக்கறிஞர் கந்தசாமி வில்லங்கம் பார்க்காமல் ஆவணத்தை பதிவு செய்த அய்யம்பாளையம் சார் பதிவாளர் பாலமுருகன் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, சார் பதிவாளர் பாலமுருகனை திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் போலி பத்திரம் தயார் செய்து தலைமறைவாக இருக்கும் 11 பேரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். போலி ஆவணம் தயார் செய்த நிலக்கோட்டை வழக்கறிஞர் கந்தசாமியையும் போலீசார் தேடி வருகின்றனர். இதனால் நிலக்கோட்டை வத்தலகுண்டு வாடிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.