இராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவிக்கையில் :- இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரைப்படி 2024 நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் 20.03.2024 அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கவும், 27.03.2024 அன்று வேட்புமனு கடைசி நாளாகவும், 28.03.2024 அன்று வேட்புமனு பரிசீலனையும் மேற்கொள்ளப்பட்டு 19.04.2024 வாக்குப்பதிவும், 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப் பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இன்று முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறைக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. இதிலிருந்து 24 மணி நேரத்திற்குள் அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்படவும் மற்றும் அரசு இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் அனுமதியின்றி உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டுள்ளது. 1950 மற்றும் 1800 425 7092 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையும் மற்றும் 04567-230410, 04567-230411, 04657-230412, 04567-230413 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம். அதன் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதையொட்டி, 48 பறக்கும் படை குழு, 24 நிலையான கண்காணிப்பு குழு என கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு, தேர்தல் விதிமுறைகள் மீறுவது கண்டறிந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் பொதுமக்கள் ரூபாய் 50,000/க்கும் மேல் கொண்டு செல்வதாக இருந்தால் உரிய ஆவணங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டும். காவல்துறை மற்றும் துணை இராணுவம் ஐந்து கம்பெனிகள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளார்கள். மாவட்டத்தை பொருத்தவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேர்தல் சிறந்த முறையில்நடத்திட உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு , பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கௌர், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)இளங்கோ மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
Daily Archives
March 16, 2024
தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது, என்னென்ன கட்டுப்பாடுகள்! எதற்கு அனுமதி! எதற்கு அனுமதி இல்லை!-தேர்தல் ஆணையம் அறிவித்த முழுமையான தகவல்கள்..
by Askar
written by Askar
543 தொகுதிகளை கொண்ட நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
ஒட்டுமொத்தமாக முதற்கட்ட தேர்தலில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் வந்து விடுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து (இன்று பிற்பகல் 3 மணி) தேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டிற்கு வந்துவிட்டதால், அதன் பின்னர் மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தேர்தல் கமிஷனின் கவனத்திற்கு கொண்டு வந்த பிறகே அமலுக்கு வரும். தேர்தல் நடத்தை விதிகளினால் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளிலும் கட்டுப்பாடுகள் வந்துவிடுகின்றன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான புதிய நடத்தை விதிகளை ஒவ்வொரு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆட்சியில் இருக்கும் கட்சிகள், வாக்காளர்களை கவரும் வகையில் புதிய திட்டங்கள், நிதி உதவிகளை அறிவிப்பது, எந்தவிதமான வாக்குறுதிகளை அளிப்பது மற்றும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது தடை செய்யப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடு, புதிய திட்டங்களுக்கு மட்டுமல்லாமல் நடந்து கொண்டிருக்கிற திட்டங்களுக்கும் பொருந்தும்.
தேசியம், மண்டலம் மற்றும் மாநில அளவில் நடைபெறும் திட்டங்களை அரசு அதிகாரிகள்தான் எந்தவொரு அரசியல் கட்சியினரின் சேர்க்கை இல்லாமல் செயல்படுத்த வேண்டும். ஆனால் அது, ஆளும் கட்சிக்கு சாதகமாக வாக்காளர்களை கவரும் வகையில் இருந்துவிடக்கூடாது. இதில் மேலும் தெளிவு பெற தலைமை தேர்தல் அதிகாரிகளை அணுக வேண்டும்.
குறிப்பிட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு ஏற்கனவே செய்யப்பட்டு இருந்தாலும் அல்லது கவர்னர் உரையிலோ, பட்ஜெட் அறிக்கையிலோ அந்த திட்டம் இடம் பெற்றிருந்தாலும், அதை ஒரு சாக்காக எடுத்துக் கொண்டு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு, அந்தத் திட்டங்களை தொடங்கி வைக்கவோ, அறிவிக்கவோ கூடாது. அது வாக்காளர்களை கவரும் நடவடிக்கையாக அமைந்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறும் குற்றமாகிவிடும்.
அரசின் திட்டங்களுக்கு புதிதாக நிதி ஒதுக்கவோ அனுமதி அளிக்கவோ கூடாது. அமலில் இருக்கும் மக்கள் நலத்திட்டங்கள் என்றாலும்கூட, அவற்றை அமைச்சர்கள் ஆய்வு செய்யவோ செயல்படுத்தவோ கூடாது.
மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவோ அல்லது திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை அளிப்பது என்றாலுமோ தேர்தல் கமிஷனின் அனுமதி இல்லாமல் மேற்கொள்ளக்கூடாது. (எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மேற்கொள்ளும் தொகுதி மேம்பாட்டுப் பணிகளும் அதில் அடங்கும்).
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பு பணிக்கான ஆணை வழங்கப்பட்டு இருந்தாலும், பணி தொடங்கியிருக்காத நிலையில் புதிதாக அந்தப் பணியை தொடங்கக் கூடாது. ஏற்கனவே பணி தொடங்கப்பட்டு இருந்தால் அதை தொடர்ந்து நடத்தலாம். பணி முடிந்ததும், அதிகாரிகள் திருப்தி அடைந்தால் அதற்கான பணத்தை விடுவிக்கலாம்.
வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் தொடர்பான அவசர கால நிவாரணம் வழங்கும் திட்டங்கள், வயது முதிர்ந்தோருக்கான திட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு கூறாது. ஆனால் இதற்கான முன் அனுமதியை தேர்தல் கமிஷனிடம் பெற்றிருக்க வேண்டும். ஆனாலும், அதை கவனத்தை ஈர்க்கும் விழாக்கள் மூலம் ஆட்சியில் உள்ள கட்சிகள் வழங்கக்கூடாது. இது மற்ற கட்சிகளை பாதிக்கும்.
அரசுத் திட்டங்களின் நிதியுதவியுடன் இயங்கும் தண்ணீர் லாரி, ஆம்புலன்ஸ் போன்றவற்றில் எழுதப்பட்டுள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள், தேர்தல் முடியும்வரை மூடப்பட வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே, அரசு திட்ட உதவிகளைப் பெறுவோரின் பெயரை தேர்வு செய்திருந்தார் அதை அவர்களுக்கு வழங்கலாம்.
மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள பயனாளிகளைக் கொண்டு, ஏற்கனவே பட்டியலிடப்பட்டு அனுமதிக்கப்பட்டு இருக்கும் புதிய திட்டப் பணிகளை தொடங்கலாம். ஏற்கனவே முடிவுற்ற டெண்டர்களின்படி, தேர்தல் கமிஷனின் அனுமதிக்குப்பிறகு பணிகளை தொடங்கலாம். உலக அளவிலான டென்டர் கோரப்பட்டு இருந்தால் அவற்றை இறுதி செய்யலாம்.
பிரதமர், முதல்-அமைச்சர் நிவாரண நிதியை நேரடியாக பயனாளிகளுக்கு, தேர்தல் கமிஷனின் அனுமதி பெறாமல் வழங்கலாம். அரசு வாகனங்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது. வீட்டில் இருந்து அலுவலகம் செல்வதற்கு மட்டும் அமைச்சர்கள் அரசு வாகனங்களை பயன்படுத்தலாம்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதிகாரிகளை தனியாகவோ அல்லது குழுவாகவோ அழைத்து, முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் காணொலிக் காட்சி மூலம் பேசக்கூடாது. மிகவும் அவசர நிலை என்றால், தலைமைத் தேர்தல் அதிகாரியை அணுகி அனுமதி பெற்று பேச வேண்டும்.
எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ, சாதி, மதம், இனம், மொழி தொடர்பான வேற்றுமைகளை பேசி மக்களிடையே கசப்பு உணர்வையும், சலசலப்பையும் ஏற்படுத்தக்கூடாது. அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று குற்றம்சாட்டுவது, அவற்றின் கொள்கைகள், திட்டங்கள், பழைய சம்பவங்கள், பணிகள் பற்றியதாக மட்டுமே இருக்க வேண்டும். ஒருவரது பொது வாழ்க்கைக்கு சம்பந்தப்படாத தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசக் கூடாது.
ஒரு வேட்பாளர் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளரின் குடும்பத்தினருக்கு எந்த தொந்தரவும் அளிக்கக்கூடாது. அவரது வீட்டு முன் பிரசாரக் கூட்டம் என்ற பெயரில் போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.
ஓட்டுக்காக சாதி, மத உணர்வை தூண்டக்கூடாது. மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் பிற வழிபாட்டு தலங்கள் எதுவும், தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படக் கூடாது. ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு மது, பணம், பரிசுப் பொருள் கொடுக்கக் கூடாது. ஓட்டுபோட வாக்காளர்களை மிரட்டக் கூடாது.
தனிப்பட்ட யாருடைய நிலம், கட்டிடம், சுற்றுச்சுவர் போன்றவற்றை அவரது அனுமதி இல்லாமல் அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது. ஒரு அரசியல் கட்சி நடத்தும் பொதுக் கூட்டத்தில் மற்ற கட்சியினர் புகுந்து கேள்வி கேட்பது போன்ற செயலில் ஈடுபட்டு பிரச்சினையை ஏற்படுத்தக் கூடாது.
ஒரு கட்சியினர் ஒட்டிய சுவரொட்டிகளை மற்ற கட்சியினர் அகற்றக் கூடாது. ஒரு கட்சி அல்லது வேட்பாளர், பொதுக்கூட்டம் நடத்துவது பற்றி முன்கூட்டியே போலீசிடம் தகவல் அளிக்க வேண்டும். ஒலி பெருக்கிகளை பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரியின் அனுமதியை பெறவேண்டும். காலை 6 மணிக்கு முன்பும், இரவு 10 மணிக்கு பின்பும் அதை பயன்படுத்தக் கூடாது. ஊர்வலத்திற்கு அனுமதி பெற்றிருந்தால், அது செல்லும் இடம், நேரம் ஆகியவற்றை பின்னர் மாற்றக் கூடாது. கொடும்பாவி பொம்மைகளை எரிக்கக்கூடாது.
தேர்தலின்போது தங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் வகையில், தற்காலிகமாக அதிகாரி யாரையும் ஆளும் அரசு நியமிக்கக்கூடாது. அரசு சாரா பணி நியமனங்கள், பொதுத்துறையில் பணி நியமனங்களை செய்யக்கூடாது. வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
85 வயதிற்கும் மேற்பட்டவர்கள், 40% மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம்- ராஜீவ்குமார் அறிவிப்பு..
by Askar
written by Askar
100 வயதைக் கடந்த 2.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்
85 வயதிற்கும் மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு
85 வயதிற்கும் மேற்பட்டவர்கள், 40% மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கலாம் – ராஜீவ்குமார்
லோக்சபா தேர்தலில் தகுதியானவர்களை தேர்வு செய்யுங்கள்
குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை நாளிதழ்களில் வெளியிட வேண்டும் – ராஜீவ் குமார்
பண பலம், ஆள் பலம், விதிமீறல் போன்றவை தேர்தல் ஆணையம் முன் உள்ள சவால்கள் – ராஜீவ்குமார்
விதிமீறல் பற்றி 1905 என்ற எண்ணில் கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து புகார் செய்யலாம் – ராஜீவ்குமார்
வேட்பாளர்கள் குறித்த விபரங்களை செயலியில் அறிந்து கொள்ள ஏற்பாடு – ராஜீவ்குமார்
ஹெலிகாப்டர் முதல் யானை வரை அனைத்து மூலமாகவும் வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் அனுப்பப்படும்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்த முதல்வரின் அறிவிப்பு; கவிஞர் பேரா வரவேற்பு..
written by Abubakker Sithik
இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்த முதல்வரின் அறிவிப்பு; பொதிகை தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் பேரா வரவேற்பு..
சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை நெல்லை பொதிகை தமிழ்ச்சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து பொதிகை தமிழ்ச்சங்க நிறுவனர் கவிஞர் பேரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்பான் மகாகவி பாரதி. மூத்த தமிழ் அறிஞர் பரிதிமாற்கலைஞர் தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழி என்றழைத்து மகிழ்வார். வளம் மிக்க நமது தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி நிலை கிடைப்பதற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பங்களிப்பு அளப்பரியது. ஒரு நூற்றாண்டு கால தமிழர்களின் கனவுகளை நினைவாக்கும் விதமாக செம்மொழி என்கின்ற தகுதியை முத்தமிழறிஞர் கலைஞரின் முயற்சியால் தமிழ் அடைந்தது.
அந்த செம்மொழியாம் தமிழுக்கு முதல் செம்மொழி மாநாட்டினை கோயம்புத்தூரில் டாக்டர் கலைஞர் நடத்தினார். இப்போது 2025-ஆம் ஆண்டில் ஜூன் மாதம் சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முதலமைச்சரின் இந்த அறிவிப்பை பொதிகைத் தமிழ்ச் சங்கம் வரவேற்கிறது. இந்த மாநாடு சிறப்பாக நடந்திடவும், தமிழ் மொழி இன்னும் உயர்ந்து விளங்கிடவும் முயற்சி எடுத்து வரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளையும் மனமாற பாராட்டுகிறோம். சென்னையில் 2025- ஆம் ஆண்டில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுமென அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெடுஞ்சாலை துறையினரால் தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு…
by mohan
written by mohan
மதுரை நகரில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலையை நான்கு வழி பாதையாக விரிவுபடுத்தும் பணி நெடுஞ்சாலைத்துறை என்றால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பழகானந்தத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலையை நான்கு வழியாக கட்டமைக்கும் பணியை கடந்த சில மாதங்களாக நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பணியின் பொழுது மழைநீர் வடிகாலுக்கு உண்டான பணி சேர்த்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சுமார் 20 அடி பள்ளம் தோண்டப்பட்டு பைப்லைன் அமைக்கும் இதற்காக மூலக்கரை -பழங்காநத்தம் வரை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இரவு, பகலாக பள்ளம் தோண்டி குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது. ஆனால் இந்தப்பணிகள் குறித்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் எந்த வித முன்னேற்பாடு நடவடிக்கைகளும் எடுக்க வில்லை. இதன் பணிகள் மந்த நிலையில் நடைபெற்று வருவதால் சாலையின் நடுவில் தோண்டப்பட்ட பள்ளங்களால் பழங்காநத்தம் பகுதியில் அதிக நேரம் போக்குவரத்து நெரிசல், பள்ளி கல்லூரி மாணவர்கள் குறித்த நேரத்தில் போக முடியாமல், தவிப்பு அடிக்கடி விபத்து, மற்றும் கனரக வாகனங்களால், போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது இந்த நிலையில் நேற்று பசுமலை அருகே சாலையில் குடிநீர் இணைப்புக்காக சுமார் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டதில் அதன் வழியே சென்ற ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தி சாலையில் அபாயகரமாக தோண்டப்பட்டு இருக்கக்கூடிய பள்ளத்திற்கு எந்தவிதமான முன்னெச்சரிக்கை தடுப்புகளும், ஒளி எதிரொலிகிகளும் இல்லாத காரணத்தினால் சுமார் 20 அடி பள்ளத்தில் தான் ஓடி வந்த ஆட்டோ உடன் கவிழ்ந்து விழுந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் பள்ளத்தில் இருந்த ஆட்டோவை கிரேன் உதவியுடன் மேலே தூக்கினார். இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோவில் சவாரி ஏதும் இல்லை. இதனால் பெரிய அசம்பாவிதம் நடைபெறவில்லை.இருந்தபோதும் மேற்கண்ட சாலையில் பகல் மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி, பள்ளி பேருந்துகள், பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள், என நாள் முழுவதும் தொடர்ச்சியாக லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இருந்தும் அஜாக்கிரதையாக பணியை மேற்கொண்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் நீடித்து வரும் தொகுதி பங்கீடு இழுபறி! திங்கட்கிழமை முடிவுக்கு வருகிறதா..?
by Askar
written by Askar
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீட்டை விரைந்து முடித்தாலும் காங்கிரஸ், ம.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டும் தொகுதிகளை ஒதுக்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.தமிழகத்தில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை இந்த முறை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் சில தொகுதிகளை பிடிவாதமாக கேட்பதால் தொகுதிகளை பிரிப்பதில் சிக்கல் நீடித்தது.இதனால் ம.தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தொகுதிகளை ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது.திருச்சி, ஆரணி தொகுதிகளை தவிர பிற தொகுதி கள் காங்கிரசுக்கு ஒதுக்க வாய்ப்பு உள்ளது.கரூர் தொகுதி ஜோதிமணிக்கு மீண்டும் ஒதுக்கப்பட உள்ளது. 2 தொகுதிகளில் மட்டுமே நீடித்து வந்த பிரச்சினை காங்கிரஸ் மேலிடம் வரை சென்றது.திருச்சி தொகுதியை ம.தி.மு.க. விற்கு கொடுக்க வேண்டும் என்பதில் தி.மு.க. உறுதியாக உள்ளது.தி.மு.க. தரப்பில் இருந்து தொகுதிகளை இறுதி செய்ய காங்கிரசுக்கு பல முறை அழைப்பு கொடுத்தும் மேலிட தலைவர்களிடம் இருந்து இசைவு வராததால் செல்வப்பெருந்தகை பேச்சு வார்த்தைக்கு போகாமல் இருந்து வருகிறார்.இந்நிலையில் நாளை மும்பையில் நடக்கும் காங்கிரஸ் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்கள் செல்கிறார்கள். அதனால் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து திங்கட் கிழமை இறுதி செய்யப்பட உள்ளது.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கையெழுத்து இடுகிறார்.கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளில் 7 தொகுதிகள் மீண்டும் வழங்கப்பட உள்ளது. 2 தொகுதிகள் மட்டுமே மாற வாய்ப்பு உள்ளது.எனவே 18-ந்தேதி காங்கிரஸ், ம.தி.மு.க.விற்கு தொகுதிகளை ஒதுக்கிவிட்டு தேர்தல் பணிகளில் தீவிரம் காட்ட தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
லஞ்சம் பெறுவதையும் தடுக்க வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதைச் சகித்துக்கொள்ள முடியாது, மதுரை உயர்நீதிமன்றம் காட்டம்..
by Askar
written by Askar
லஞ்சம் பெறுவதையும் தடுக்க வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதைச் சகித்துக்கொள்ள முடியாது, மதுரை உயர்நீதிமன்றம் காட்டம்..
லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை 2-வது முறையாகத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைகிளை, லஞ்சம் பெறுவதைத் தடுக்க வேண்டிய அமலாக்கத்துறையிலேயே லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர் சுரேஷ்பாபு மீது சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க அவரிடம் இருந்து ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, அங்கித் திவாரி ஜாமீன் கோரி முதலில் தாக்கல் மனுக்களை திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் 2 முறை தள்ளுபடி செய்தது. அடுத்து, அங்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அதில், 100 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன், இதுவரை தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என்று குறிப்பிட்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி அங்கித் திவாரி 2வது முறையாக உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனுத் தாக்கல் செய்தார்.
அங்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த சீராய்வு மனு மார்ச் 12-ம் தேதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விவேக்குமார் சிங், இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை எனக் கூறி வழக்கில் இருந்து விலகினார்.
இதைத் தொடர்ந்து, அங்கித் திவாரியின் ஜாமீன் கோரி தாக்கல் செய்த சீராய்வு மனு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதி தண்டபாணி முன்பு வெள்ளிக்கிழமை (15.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார், அங்கித் திவாரி வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞரின் பதிலைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தண்டபாணி, இந்த வழக்கில் லஞ்சஒழிப்புத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது எனக் கூறி அங்கித் திவாரியின் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்தார்.
மேலும், “அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் இந்த வழக்கு தீவிரமானது. அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல்கள் அதிகரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. சட்டவிரோத செயல்களையும், லஞ்சம் பெறுவதையும் தடுக்க வேண்டிய வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதைச் சகித்துக்கொள்ள முடியாது” என்று நீதிபதி தண்டபாணி தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
துபாயில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த பயணி சார்ஜிங் பிளக்கிற்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 6 1/2 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.
by mohan
written by mohan
துபாயிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்துவதாக வந்த தகவலையடுத்து பயணிகளை சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த இரண்டு சார்ஜிங் பிளக்கிற்குள் 6 லட்சத்து 60 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான 100 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.சுங்க இலாக நுண்ணறிவு பிரிவினர் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டணம் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து மகன் விஜய் ஆனந்த் (வயது 40) என்பவர் என தெரிய வந்தது.துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த தங்கத்தை சுங்க இலாக்கா நுண்ணறிவு பிரிவினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள குளத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளமகாதேவன் ரஷ்யா ஆகியோரின் மகள் யாழிசை வயது 9. இவர் விக்கிரமங்கலம் அருகே உள்ள வி. கோவில்பட்டி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருந்து இங்குள்ள அரசு பள்ளியில் நான்காவது படித்து வருகிறார். நேற்று மாலை பாட்டி வீட்டுக்குஅருகே உள்ள கால்வாயில் பாட்டி அமுதாவும் யாழிசையும் குளிக்க சென்றுள்ளனர். குளித்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக கால்வாயில் யாழிசை தண்ணீரில் மூழ்கினார். பாட்டி கண்ணெதிரே பேத்தி தண்ணீரில் மூழ்கினார் இதை பார்த்த பாட்டி அமுதா கூச்சலிட்டார் அக்கம் பக்கத்தினர்வந்து பார்த்தபோது அதிகமான தண்ணீர் செல்வதால்இது குறித்து விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் அசோக்குமார்சம்பவ இடத்திற்கு சென்று கால்வாயில் வரக்கூடிய தண்ணீரை நிறுத்தபொதுப்பணித்துறைக்கு தகவல் கொடுத்தார். தண்ணீர் நிறுத்தப்பட்டது.இதன் பின்னர் சோழவந்தான் தீயணைப்பு படையினர் கால்வாயில் மூழ்கி இருந்த யாழிசையை பிணமாக மீட்டனர். குளிக்கச் சென்ற சிறுமி பிணமாக கிடந்தது கண்டு உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து உசிலம்பட்டி டிஎஸ்பி விஜயகுமார், செக்கானூரணி இன்ஸ்பெக்டர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார்வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் கூறு ஆய்வுக்காக பிணத்தைஅனுப்பி வைத்தனர். பாட்டிவீட்டுக்கு வந்த பேத்தி தண்ணீரில் மூழ்கி இறந்த செய்தி அந்தக்கிராமத்தில்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நோயாளிகளை காக்க வைத்து விட்டு மருத்துவமனையின் ஒரு அறையில் நடைபெற்ற சேலை விற்பனையை பார்க்க சென்ற செவிலியர்கள். வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சந்தைமேடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்காமல் காக்க வைக்கப்பட்டு செவிலியர்கள் ஒரு அறையில் ஒருங்கிணைந்து சேலை விற்பனை நடைபெற்றதை பார்த்து விற்பனையில் ஈடுபட்ட பெண்களிடம் செவிலியர்கள் மும்முரமாக பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்தும் செவிலியர்கள் தங்களது பணியை செய்யாததால் விரக்தி அடைந்து தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டு தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார். மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கழிவறைக்கு சென்ற 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடைபெற்றது எனவும் செவிலியர்கள் யாரும் சேலை விற்பனை செய்வதை வேடிக்கை பார்க்க செல்லவில்லை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -16
( கி.பி 1299-1922)
டெல்லியிற்க்குள் தைமூரின் முழுப்படைகளும் நுழைந்தன.
கட்டிடங்களில் தளபதிகள் தங்கிக்கொண்டனர்.
மேலும் வீரர்களுக்கு
தங்க கூடாரங்களும் அமைக்கப்பட்டன.
தைமூரின் பயத்தால் டெல்லி சுல்தான் முஹம்மதுஷாவும்
தளபதி மல்லுகானும்
தப்பி ஓடிவிட்டனர்.
அரசவை கூட்டப்பட்டது.
டெல்லியின் முக்கிய
அமைச்சர்கள்
அதிகாரிகள் வந்து தைமூருக்கு பணிந்து சென்றார்கள்.
தைமூருக்கு யானையை கண்டாலே
பயம்.100 க்கு மேற்பட்ட யானைகள்
தைமூரின் முன்பு வந்து மண்டியிட்டன.
தைமூருக்கு யானைகளை பார்ப்பது விநோதமாகவும்,
மகிழ்ச்சியாகவும் இருந்தது.
ஒரு யானையின் மீது அமர்ந்து டெல்லியை மகிழ்ச்சியுடன் வலம் வந்தார்.
அதில் சில யானைகளை சில அரசர்களுக்கு பரிசாக அனுப்பி வைத்த தைமூர்,
ஆசியா முழுவதும் தன் வசமாகிவிட்டதை
அறிவிக்க வைத்தார்.
நீண்ட பயணம் செய்ததால் தைமூரின் வீரர்கள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டனர்.
டெல்லி கருவூலத்தில் இருந்த செல்வங்களை தைமூர் தன்னுடன் எடுத்துச் செல்ல திட்டமிட்டார்.
நாடுகளை பிடித்து செல்வங்களை கொள்ளையடிக்கவே
மன்னர்கள் இதுபோன்ற படை எடுப்புகளை நடத்தினர் என்பதை புரியவேண்டும்.
போர் நடந்ததே முஸ்லீம் மன்னர்களுக்குள்
என்பதையும்
கொல்லப்பட்டவர்கள்
இருபுறத்திலும் முஸ்லீம்களே என்பதையும் அறிய வேண்டும்.
தைமூர் அரண்மனையில் இருக்க தைமூரின் தளபதிகளும்,
வீரர்களும் டெல்லியின் செல்வங்களை கொள்ளை அடித்தனர்.
எதிர்த்தவர்களை கொன்றனர்.
தலைகளை வெட்டி
பிரமிடுகளைப்போல
அடுக்கி வைத்ததாக
கூறுவதெல்லாம்
கொஞ்சம் ஓவராக இருந்தாலும்,
போர்,செல்வங்களை
எடுத்துக்
கொள்ளுவது
போன்ற செயல்களில் ஈடுபடும் போது மக்களை பயமுறுத்த
போர்வீரர்கள் இதுபோன்ற பயமுறுத்தல் உத்திகளை கையாளுவது சர்வசாதாரணமாக நடைபெறுவதாகும்.
இரண்டு வாரங்களே
டெல்லியில் தங்கியிருந்த தைமூரை பல இளவரசர்கள்
சரணடைந்து காணிக்கைகளை செலுத்தினர்.
தைமூர் டெல்லியில் எந்த
ஆட்சியாளரையும் நியமிக்கவில்லை.
வடசிந்து மற்றும் பஞ்சாபின் ஆளுநராக கிஸ்ருகானை நியமித்தார்.
பொதுவாக தைமூருக்கு வெற்றி கொண்ட பகுதிகளில் ஆள்வதில் பிரியம் இல்லை.அடுத்த பகுதிக்கு நகர்ந்துவிடுவார்.
அவர் தனது தலைநகர் சாமர்கந்துவிற்கு
தனது சில படைப்பிரிவுகளையும்
சில தளபதிகளையும் பணித்து, அவர்கள் போர்
செல்வங்களையும்
அள்ளிச் செல்லவும்,
சாமர்கந்தை சிறந்த நகரமாக கட்டமைக்க
டெல்லியின் கைவினை கலைஞர்களையும்
அழைத்து செல்லவும் உத்தரவிட்டார்.
அவர்கள் தப்பிவிடாமல் இருக்க
கைவிலங்கிட்டு அழைத்துச்
சென்றனர்.
டெல்லி தைமூரின் படையால் சீரழிந்த தாகவும் அது சீராக பல ஆண்டுகள் ஆன தாகவும்,
டெல்லியின் தெருக்களில் பிணங்கள் குவிந்து இருந்ததாகவும்,
அங்கு பிணந்திண்ணி கழுகுகளும்,
கழுதைப்புலிகளும்
சுற்றி திரிந்ததாகவும்,
கழுதை புலிகள் கத்துவது பேய் கத்துவதைப்போல இருந்ததால்,
மனிதர்கள் பயந்ததாகவும்,
டெல்லி தெருக்களில் இரண்டு மாதங்கள் ஆள்நடமாட்டமே இல்லை எனவும்
எழுதி வைத்திருப்பது
உண்மையாக தெரியவில்லை.
தொழுகை நடத்துகிற
தைமூர் குறிப்பாக தனது மதமக்களாகிய
முஸ்லீம்கள் நிறைந்திருக்கிற
டெல்லியை இவ்வளவு மோசமாக சீரழித்தார் என்பது பொய் புரட்டுகள் ஆகும்.
உஸ்மானிய பேரரசர் பயாசித்தைப்பற்றி
தைமூரிடம் சிற்றரசர்கள் நேரிடையாக வந்து குறைகள் கூறினார்கள்.
அது தைமூரின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தியது.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
written by Abubakker Sithik
தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி; நலத்திட்ட உதவிகள் வழங்கல்..
தென்காசி மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.3 கோடியே 74 இலட்சத்து 16 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 485 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 3 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வழங்கினார். தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் 15.03.2024 அன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ரூ.3 கோடியே 74 இலட்சத்து 16 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 485 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 3 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் வழங்கினார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கிஷோர் சிறப்புரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பழனி நாடார் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்) வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்று கடந்த இரண்டரையாண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு அரும்பணிகளை செய்து வருகிறார். தென்காசி மாவட்டம் வளர்ந்து வரும் மாவட்டம். தற்போது திருநெல்வேலியில் இருந்து தனி மாவட்டமாக பிரிந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி மாவட்டத்தின் மீது தனி அக்கறை கொண்டு பல புதிய நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். நமது முதலமைச்சர் ஏழை மக்களின் முதலமைச்சராக திகழ்ந்து வருகிறார். இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக ரூ 1 கோடியே 12 இலட்சம் தமிழக அரசால் செலவழிக்கப்பட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு துறை சார்பாக அமைக்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்த கண்காட்சியினை பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித் துறை மூலமாக கட்டப்பட்டுள்ள ரூ.1 கோடியே 28 இலட்சத்து 16 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 5 புதிய கட்டடங்களையும், கூட்டுறவுத் துறையின் மூலம் ரூ.67 இலட்சத்து 80 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள 4 புதிய கட்டடங்களையும், ரூ.1 கோடியே 78 இலட்சம் கட்டப்பட்டுள்ள தென்காசி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக ரூ.3 கோடியே 74 இலட்சத்து 16 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து வருவாய்த்துறை மூலமாக 226 பயனாளிகளுக்கு ரூ.51.89 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட தொழில் மையம் அலுவலகத்தின் மூலமாக 11 பயனாளிகளுக்கு ரூ.15.46 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், இணை இயக்குநர் வேளாண்மை துறையில் 05 பயனாளிகளுக்கு ரூ.0.39 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத்துறையின் மூலமாக 30 பயனாளிகளுக்கு ரூ.77.36 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மூலமாக 80 பயனாளிகளுக்கு ரூ.4.38 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக 97 பயனாளிகளுக்கு ரூ.93.13 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத்துறை மூலமாக 10 பயனாளிகளுக்கு ரூ.3.62 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலமாக ரூ.64 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும். கலை பண்பாட்டுத்துறை மூலமாக 5 பயனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் மூலம் 16 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடியே 54 இலட்சத்து 93 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் என மொத்தம் ரூ.4 கோடியே 3 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் வழங்கினார்.
முன்னதாக கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் தென்காசி சித்திரசபை மாணவிகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பத்மாவதி, வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி ஒன்றியக் குழுத்தலைவர் ஷேக் அப்துல்லா, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன், தென்காசி ஒன்றியக்குழு துணைத் தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், செயற்பொறியாளர் (கட்டடம் மற்றும் பராமரிப்பு) அணிட்டா சாந்தி, உதவி செயற்பொறியாளர் (கட்டடம் மற்றும் பராமரிப்பு) இப்ராகிம், உதவி பொறியாளர் செல்வி.ராணி, செய்தி மக்கள் தொடபு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்புஇ அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் அனைத்துதுறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் தாமரை மலர வேண்டும்!- சரத்குமார் ஆசை..
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் நடிகர் சரத் குமாரும் கலந்துகொண்டார். முன்னதாக, பிரதமர் மோடி திருவனந்தபுரம் வரை விமானத்தில் வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா உடன் இணைத்த பின்னர் இது எனது கன்னி பேச்சு.
பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிலும் நம் தேசத்திலும் நல்ல கருத்தை பதிவு செய்துவருகிறார். அவரின் கருத்தை நான் 40 தொகுதிகளிலும் முன்நிறுத்துவேன்.
நான் ஒருபோதும் எடுத்த காரியத்தை முடிக்காமல் இருந்ததில்லை. அந்த வகையில் நான் இந்தக் காரியத்தை எடுத்துள்ளேன்.
எந்த ஒரு சுயநலமும் இல்லாமல் நாட்டுக்காக பிரதமர் மோடி நல்லாட்சி செய்துவருகிறார். நான் அந்தக் கட்சியுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்துள்ளேன். நாட்டில் ஊழலற்ற நல்லாட்சி தேவை.
தமிழ்நாட்டில் நடைபெறும் ஊழலாட்சிகள் அகற்றப்பட வேண்டும். கடந்த 57 ஆண்டுகள் திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்துவிட்டார்கள்.
இந்தத் திராவிடம் குடும்ப ஆட்சியும், மன்னராட்சியும்தான் நடத்துகிறது. தி.மு.க.வில் தொண்டன் தலைமைக்கு வரமுடியாது.
2025ல் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா வரும்போது அதனை வழிநடத்த மோடி வர வேண்டும். உழைப்பால் உயர்ந்தவர் மோடி.
அண்ணாமலையை பொறுத்தமட்டில், தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார். சுதந்திர இந்தியாவில் இது முக்கியமான காலகட்டம்.
மோடி 3வது முறையாக பிரதமர் ஆக வர வேண்டும். அதற்காக தாமரை ஒவ்வொரு தொகுதிகளிலும் மலர வேண்டும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா வெல்ல வேண்டும் என்றார்.
தொடர்ந்து, பாரத் மாதா கி ஜெய். தமிழ் அன்னையை வணங்குகிறேன் என தனது உரையை நிறைவு செய்தார்.
You must be logged in to post a comment.