இராமநாதபுரம் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அருகே உள்ள நீர்நிலைகளில் சேமித்திட மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்று ஆய்வு செய்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. 17.11.2020 அன்று 20.75 மி.மீ அளவும், 18.11.2020 அன்று 46.43 மி.மீ அளவும் சராசரி மழை அளவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பரமக்குடி பகுதியில் 131 மி.மீ அளவு இன்று (18.11.2020) பதிவாகியுள்ளது. கனமழையை எதிர்கொள்ள ஏதுவாக மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எளிதில் மழைநீர் தேங்கக்கூடிய 39 பகுதிகளில் கண்டறியப்பட்டு, 15 மண்டல அளவிலான குழுக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவசர கால உதவிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இக்கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்ணிலும், 04567-230 060 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியதை அடுத்து, அந்தந்த பகுதிகளில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் மூலம் உடனடியாக தற்கால வடிகால் அமைத்து தேங்கிய மழைநீரை அருகிலுள்ள கண்மாய், ஊரணி, குளங்களில் சேமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில், ராமநாதபுரம் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றி அருகே உள்ள நீர் நிலைகளில் சேமிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். சிதம்பரம்பிள்ளை ஊரணி, நொச்சிவயல் ஊரணி, முகவை ஊரணி, லட்சுமிபுரம் ஊரணி ஆகிய ஊரணி பகுதிகளிலும், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் வைகை நகர், கிருஷ்ணாபுரம், காட்டூரணி ஆகிய பகுதிகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரை பொதுமக்கள் சிரமப்படாத வகையில் போர்க்கால அடிப்படையில் அருகே உள்ள நீர்நிலைகளில் சேமிக்கவும், கண்மாய்கள் மற்றும் ஊரணிகளில் உள்ள தண்ணீரின் அளவை தொடர்ந்து கண்காணிக்கவும், நீர் நிலை கரைகளின் தன்மை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து உடைப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் என்.விஸ்வநாதன், ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெ.அப்துல் ஜபார், ஏ.ராஜேந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்
7
previous post
You must be logged in to post a comment.