இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் உமையாள்புரம் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க கடந்த ஓராண்டுக்கும் மேலாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது. டாஸ்மாக் கடை திறந்தால் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இன்று இரவு (நவ.3) கடையை அப்பகுதி மக்கள் திடீரென முற்றுகையிட்டனர். மேலும் ஆவேசமடைந்த பொதுமக்கள், ராமநாதபுரம்- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடம் இன்ஸ்பெக்டர் சபரிநாதன், சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைவதை முற்றிலும் நிறுத்துவதாக உறுதியளித்தால் மட்டுமே அந்த இடத்தை விட்டு அகல்வோம் என பொதுமக்கள் உறுதியாக கூறியதால் பரபரப்பு நிலவுகிறது.
You must be logged in to post a comment.