தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம்-ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு..!
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்ற மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர்.
தென்காசியில் பிரசித்தி பெற்ற உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோயிலில் மாசித் திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. சமுதாய கட்டளைதாரர்கள் சார்பில் தினமும் சுவாமிக்கு அபிஷேக தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மாள் வீதியுலா, ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகள், இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 07.03.2020 சனிக்கிழமை நடைபெற்றது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு காலை 5.40 மணிக்குமேல் 6.20 மணிக்குள் சிறப்பு அலங்காரத்தில் காசி விஸ்வநாதர், உலகம்மன் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். பஞ்ச வாத்தியங்கள் முழங்க தேரோட்டம் தொடங்கியது. முதலில், காலை 8.45 மணிக்கு சுவாமி தேர் முதலில் இழுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றியுள்ளள தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி, கிழக்குமாசி வீதிகளில் வலம் வந்த தேர் காலை 9.30 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது. பின்னர், உலகம்மன் தேர் காலை 9.45 மணிக்கு இழுக்கப்பட்டது.
நான்கு வீதிகளிலும் வலம் வந்த தேர் காலை 10.45 மணிக்கு நிலையத்தை வந்தடைந்தது. தேர்த்திருவிழா நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் விழாக் குழுவினர்கள் செய்திருந்தனர். தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்ட விழாவில் கலந்து கொண்டனர். பின்னர், மதியம் 12.30 மணியளவில் சுவாமிக்கு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.