இராமநாதபுரத்தில் படைவீரர் கொடி நாள் தேநீர் விருந்து விழா மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி தலைமையில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள் 8 பேருக்கு ரூ.1,72,500 கல்வி உதவித்தொகையை மாவட்ட வருவாய் அலுவலர் முத்து மாரி வழங்கினார். அவர் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ம் தேதி படைவீரர் கொடி நாள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முப்படைவீரர்களின் வீரச் செயல்களை நினைவு கூறுவது ஒவ்வொருவரின் கடமை. முன்னாள் படைவீரர்களின் மறுவாழ்விற்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் போரில் வீரமரணமடைந்த படைவீரரின் குடும்பத்தினருக்கும், ஊனமுற்ற படைவீரர்களுக்கும் மக்கள் மனமுவந்து வழங்கும் கொடி நாள் நிதி, நன்கொடைகள் நல்ல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.
2017ம் ஆண்டு கொடி நாள் வசூலிப்பு அரசு நிர்ணயித்த இலக்கு ரூ.41,08,000 தாண்டி ரூ.46.99 லட்சம் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது 114 சதவீதம் அதிகமாகும். 2018 ஆம் ஆண்டுக்கு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ரூ.45,18,800 இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. 2-ஆம் உலகப்போர் நிதியுதவி, மாதாந்திர நிதியுதவி, மூளை வளர்ச்சி குன்றிய முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு நிதியுதவி, ஈமச்சடங்கு நிதியுதவி, திருமண நிதியுதவி, கண்ணாடி நிதியுதவி, போர்ப்பணி ஊக்க மானியம், வங்கிக்கடன் வட்டி மானியம், வருடாந்திர பராமரிப்பு மானியம் என 92 பயனாளிகளுக்கு ரூ.18,30,751 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,72,500 கல்வித் தொகை வழங்கப்பட்டது. செயற்பொறியாளர் ( குடிநீர் வடிகால் வாரியம்) மாரி, முன்னாள் படைவீரர் நல அலுவலக துணை இயக்குநர் .மணிவண்ணன், முப்படை வீரர் வாரிய உபதலைவர் லெப்.கர்னல்.எஸ்.ஷேக் அப்துல் காதர், கடற்படை கமாண்டர் நடராஜன், கடலோர காவல் படை உதவி கமாண்டன்ட் கார்த்திக் வி.மாருதி உட்பட அரசு அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.