இராமநாதபுரம், ஆக.23 – இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பாக்குவெட்டி கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். பொதுமக்கள் 140 பேரிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று 166 பயனாளிகளுக்கு ரூ.55.70 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அவர் பேசியதாவது:
தமிழக அரசின் உத்தரவு படி ஒவ்வொரு மாதமும் தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள் தோறும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த 15 நாட்களுக்கு முன், கமுதி தாலுகா பாக்குவெட்டி கிராமத்தை தேர்வு செய்து சுற்று வட்டார கிராம மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 186 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று 140 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் அனைத்து துறைகளின் திட்டங்கள் குறித்து இணையதளங்கள், ஸ்மார்ட்போன் மூலம் மக்கள் அறிந்து பயன்பெறலாம். இப்பகுதியில் காய்கறிகள் அதிகம் விளையும் பகுதியாக இருப்பதாக தெரிகிறது. பரமக்குடியில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் உரிய விலைக்கு விற்பனை செய்து தரப்படும். விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் தேவையான அளவு கடன் உதவி வழங்கப்படுகிறது. ஓராண்டிற்கு வட்டியில்லா கடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களில் விவசாயிகள் பொதுமக்கள் பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வருவாய், சமூகநலம், குழந்தைகள் வளர்ச்சி, மாற்றுத்திறனாளிகள் நலம், குழந்தைகள் பாதுகாப்பு நலம், மகளிர் திட்டம், பொதுசுகாதாரம், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, பிற்படுத்தப்பட்டோர் நலம் ஆகிய துறைகளில் அரசின் திட்டங்கள் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகளை பொதுமக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார். வருவாய்த்துறை சார்பில் 31 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, 34 பேருக்கு கணினி திருத்தம் உத்தரவு, 26 பேருக்கு பழங்குடியினர் சாதிச்சான்று, இருவருக்கு நத்தம் பட்டா மாறுதல் (முழப்புலம்), 2 பேருக்கு நத்தம் பட்டா மாறுதல் (உட்பிரிவு), 26 பேக்கு பட்டா மாறுதல் (உட்பிரிவு), பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 8 பேருக்கு விலையில்லா தையல் இயந்திரம் சலவைப்பெட்டி, மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை 12 பேருக்கு இலவச தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒருவருக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் வண்டி, வேளாண், உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 15 பேருக்கு வேளாண் உபகரணங்கள், தோட்டக்கலைத் துறை மூலம் இருவருக்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் கொய்யா கன்று, ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் கட்டுமானப் பொருட்கள் வாங்க, டிராக்டர் வாங்க 6 பேருக்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி, பேரையூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.32 லட்சம் மதிப்பில் பயனாளி ஒருவருக் லாரி என 166 பயனாளிகளுக்கு ரூ.56.80லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் வழங்கினார். பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், கமுதி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் தமிழ்ச்செல்வி, கமுதி வட்டாட்சியர் சேதுராமன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஸ்வவதி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முத்துக்குமார், கமுதி வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை, பாக்குவெட்டி ஊராட்சி தலைவர் நாகரெத்தினம், ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் சித்ராதேவி, துணை வட்டாட்சியர் வெங்கடேசன், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.