மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுமுதலைக்குளம் ஊராட்சிக்குட்பட்டது கீழப்பட்டி கிராமம். இந்த கிராமத்திற்கு பாத்தியப்பட்ட சின்னக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த கண்மாய் கடந்த 20வருடங்களுக்கு முன்பு தூர்வாரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இந்த கண்மாயில் உள்ள 12ஏக்கர் பரப்பளவை நடுமுதலைக்குளம் ஊராட்சி மன்ற தலைவரின் உறவினரும், திமுக பிரமுகரான ஒச்சாத்தேவர் என்பவர் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து நெல் உள்ளிட்ட பல்வேறு விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிராம மக்கள் கடந்த 20 வருடங்களாக ஆக்கிரமிப்புக்களை அகற்றவும், அவர்மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மனு கொடுத்து, கொடத்து ஓய்ந்த கிராம மக்கள் இறுதியாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமாரிடமும் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த நேரத்தில் கண்மாயை ஆக்கிரமிப்பு செய்த ஒச்சாத்தேவர் நெல்நடவு செய்திருந்ததாகவும், அறுவடை நேரத்தில் அறுவடை செய்த நெல்லை அரசுக்கு வழங்குவதாகவும் கிராம நிர்வாக அதிகாரியிடம் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பு பகுதியில் நடவு செய்யப்பட்டிருந்த நெல் 90 நாட்களுக்கு பிறகு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெற்பயிர்களை வருவாய்துறை அதிகாரிகள் அறுவடை செய்ய இயந்திரத்துடன் நிலத்தில் புகுந்து அறுவடை செய்து வந்த நிலையில் திடீரென அதிகாரிகள் பணிகளை நிறுத்தினர். இதனால் கிராம மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வணிகவரிதுறை அமைச்சர் மூர்த்தி தற்காலிமாக பணிகளை நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக போன் மூலம் தகவல் வந்துள்ளதாக கூறி அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். கிராம மக்கள் எவ்வளவு எடுத்துகூறியும் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றனர். அமைச்சரின் தூண்டுதலின் பேரில் அதிகாரிகள் புறப்பட்டதாக கூறி விவசாய நிலத்தில் இறங்கி கிராம மக்கள் அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆக்கிரமிப்புக்களை அகற்றவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.