இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா உப்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின் நிலையம் அமைவதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த அரசின் நடவடிக்கைகளுக்கு விவசாயிகளின் எதிர்ப்பு தொடர்கிறது. நிலம் கையகப்படுத்த உயர் நீதிமன்ற தடை பெற்றுள்ளனர். இந்நிலையில், திருப்பாலைக்குடி, மோர் பண்ணை கடலோரப் பகுதிகளில், கடலுக்குள் 6 கி.மீ., தூரத்தில் பாலம் கட்டி கடல் தண்ணீரை சுத்திகரிப்பு செய்வதால் ரசாயனம், நிலக்கரி கழிவுகளை மற்றொரு குழாய் மூலம் ஏழு கி.மீ., தூரத்தில் கடலுக்குள் விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், திருப்பாலைக்குடி, மோர் பண்ணை நாட்டுப் படகு மீனவர்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விஷத்தன்மை உடைய ரசாயன கழிவுகள் கடலில் கலப்பதால் கரையோரங்களில் வளரும் இரால், நண்டு, கணவாய் மீன் இனங்களின் மீன் இனப்பெருக்கம் அழிந்து விடும். இரண்டு பாலம் அமைவதால் மீனவர்கள் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை செல்வது தடுக்கப்படுகிறது. ஒன்றரை கி.மீ., தூரத்திற்கு தண்ணீர் வற்றி வறண்ட நிலம் போல் கடற்கரை மாறிவிடும். குளம், குட்டைகள் போல் கடற்கரை பகுதி மாறி விடும். இத்தகைய பாதிப்புகளில் எதிர்கால சந்ததிகளை பாதுகாக்க உப்பூர் அனல் மின் நிலையம் அமைக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பாசிப்பட்டினம் வரை மீனவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. மோர் பண்ணை கிராம தலைவர் கோவிந்தன், முன்னாள் தலைவர் சமூக ஆர்வலர் துரை. பாலன், ராமநாதபுரம் மாவட்ட மீனவர் கூட்டமைப்பு நிர்வாகி பால்ச்சாமி, வழக்கறிஞர் திருமுருகன் மற்றும் 20 கடலோர கிராம நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.