தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம், திருவண்ணாமலை வடடாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தீனபந்து கட்டிடத்தில், ஞாயிறு அன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் மு.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் ச.பாரி, மாவட்ட செயலாளர் க.பிரபு, மாவட்ட பொருளாளர் செ.முரளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பின்னர் செய்திளயாளர் சந்திப்பின் போது மாநில பொதுச் செயலாளர் ச.பாரி பேசியபோது,
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சியர் ஊரக வளர்ச்சி அலுவலர்கள் வாட்ஸ்அப் குழுவில் ஒரு ஒலிப்பதிவை வெளியிட்டிருந்தார். பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். முடிக்காதவர்களை பணிநீக்கம் செய்வேன். திங்கள்கிழமை அன்று நீங்கள் பணியை தொடர்ந்து செய்வதா, அல்லது வீட்டிற்கு செல்வதா? என்றவாறு பேசியுள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் அவசரம் காரணமாக, அவசர கூட்டம் நடத்திய சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா என்பவர் மயங்கி விழுந்து, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மூன்றாண்டுகளாக, பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில், வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதில் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பட்டியலில் உள்ளவர்கள், வீடுகளை பெறுவதற்கு பல்வேறு தடைகள் உள்ளது. சாப்பிடவே வழியில்லை, ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு, வீடு கட்ட முடியாது என பல குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 3 ஆண்டுகளாக முதல் தவணை பெற்றோர்கள் கூட, வீடு கட்ட முடியாத நிலையில் உள்ளனர். வங்கியில் செலுத்திய பணத்தை கூட, பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். அடித்தளம் அமைக்கவே ரூபாய் ஒரு லட்சம் செலவாகிறது. 70 ஆயிரத்தில் எப்படி வீடு கட்டுவது என, மக்கள் பலர் தவித்து வருகின்றனர். இதை மாவட்ட ஆட்சியரும் பார்த்துள்ளார்.கள நிலவரம் குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் அனைவருக்கும் இத்தகைய நிலைமை உள்ளது தெரியும். ஆனால் மாவட்ட ஆட்சியர், மந்திரத்தில் மாங்காய், தந்திரத்தில் தேங்காய் என்கிற விதமாக, உடனடியாக பணிகளை முடிக்க வேண்டும் என்று கூறுவது அதிர்ச்சியாக உள்ளது.
மாவட்ட ஆட்சியர் துறை ஊழியர்களை தொடர்ந்த மிரட்டி வருகிறார். ஆய்வுக் கூட்டங்களில் அவர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்து, நீங்கள் அனைவரும் தூக்குப்போட்டு செத்துப்போங்கள் என்று அதிகார துஷ்பிரயோகத்தில் பேசுகிறார். பணிகளில் உள்ள குறைகளை கலைவதற்கு உண்டான நடவடிக்கைகள் குறித்து, அவரிடம் பேசும்போது, காதுகளை இரண்டு கைகளாலும் மூடிக் கொள்கிறார்.இப்படியான ஆட்சியர் உள்ள நிலையில், பயனாளிகள் பங்களிப்புடன் செய்யப்படும் திட்டங்களை எப்படி செயல்படுத்துவது என்ற அதிர்ச்சி அலுவலர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஊழியர்களை எதிரிகளை போல பார்க்காமல், ஊழியர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் 2005 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த திட்டத்தில் இந்திய அளவில் பல்வேறு சிறப்பான பணிகளை செய்து, பல விருதுகளை திருவண்ணாமலை மாவட்டம் பெற்றுள்ளது. அந்த திட்டத்தில் அதிக மனித சக்தியை பயன்படுத்தியது, அந்த திட்டத்தில் ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கியது, அந்த திட்டத்தில் மழை நீர் கட்டமைப்பு வசதிகளை இந்தியாவிலேயே அதிகமாக செயல்படுத்தியது, திருவண்ணாமலை மாவட்டம் தான்.அத்தகைய பணிகளை செய்த ஊழியர்கள், இந்த திட்டப் பணிகளையும் செயல்படுத்துவதற்கு தயாராக உள்ளனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் வாட்ஸ் அப் செய்தி மூலம், துறை ஊழியர்கள் பற்றி தவறாக விமர்சனம் செய்து வருகிறார். எனவே அவரின் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டு, ஊழியர்களை அரவணைத்து, பணிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மாவட்ட ஆட்சியரின் இத்தகைய போக்கை கைவிடக்கோரி, இன்று (அக். 21) திங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து வேலையில் ஈடுபடுவார்கள். நாளை செவ்வாயன்று பகல் ஒரு மணிக்கு, அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் குறித்தான, உண்மை தன்மை குறித்து விளக்க கூட்டம் நடத்த உள்ளோம்.அதேபோல் வரும் 25ம் தேதி, மாவட்ட ஆட்சியரின் ஊழியர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் எனக்கோரி, சென்னை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரிடமும், மனித உரிமை ஆணையத்திடமும், மாநில, மாவட்ட, நிர்வாகிகள் சென்று முறையிடுவது என்ற தீர்மானங்களை இயற்றி உள்ளதாக தெரிவித்தார்.
திருவண்ணாமலை செய்தியாளர் மூர்த்தி
You must be logged in to post a comment.