தமிழ்நாடு முழுவதும் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக செயல்பட்டு வரும் கால்நடை நிலையங்களில் அனைத்து சிகிச்சைக்கள் அளிக்கப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்போர் சில சமயங்களில் உயிர்காக்கும் அவசர சிகிச்சை வழங்க வேண்டிய நேர்வுகளிலும், நடக்க இயலாத மற்றும் கால்நடை நிலையங்களுக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற இயலாத நேர்வுகளிலும், நோயுற்ற கால்நடைகளில் இறப்பு ஏற்பட்டு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இதனை தடுத்திடும் பொருட்டு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2016 ஆம் ஆண்டு நடமாடும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவைத் திட்டத்தை இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தினார்கள்.
இந்த “அம்மா ஆம்புலன்ஸ்” வாகனத்தில், கால்நடைகளின் நோய் தன்மையை அறிந்து அங்கேயே அவசர சிகிச்சை வழங்கும் வகையில் தேவையான அனைத்து அத்தியாவசிய கருவிகள், உபகரணங்கள் மற்றும் மருந்துகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. சிறிய கால்நடைகளை பரிசோதனை செய்வதற்கு மடங்கக் கூடிய பரிசோதனை மேஜை அமைக்கப்பட்டுள்ளது. வாகனம் செல்ல இயலாத இடங்களில் உள்ள நடக்க இயலாத கால்நடைகளை அவசர ஊர்திக்கு எடுத்து வருவதற்கு ஏதுவாக அகற்றி பொருத்தக்கூடிய தள்ளுவண்டி வசதியும் செய்யப்பட்டுள்ளது. நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிட ஏதுவாக ஒரு டன் எடை கொண்ட கால்நடைகளையும் தாங்கக்கூடிய சக்தி வாய்ந்த விசை தூக்கி பொருத்தப்பட்டுள்ளது. இந்த சேவை “1962” என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் விவசாயிகள் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி “அம்மா ஆம்புலன்ஸ்” வாகனம் சேவையை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். இராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, கால்நடை விவசாயிகளுக்கு தாது உப்பு கலவை வழங்கினார்.
You must be logged in to post a comment.