WJUT
WORKING JOURNALISTS UNION OF TAMILNADU
உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் பணிப்பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும்! -WJUT யின் மே தின வாழ்த்துச் செய்தி!!!
“தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச்செயலாளர் பா. பிரதீப்குமார், மாநிலப் பொருளாளர் இரா.ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள “மே” தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது;
உலகெங்கும் உள்ள உழைக்கும் தொழிலாளர் அனைவருக்கும் தொழிலாளர் தின (மே தினம்) வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
உழைக்கும் தொழிலாளர்களின் கடுமையான உழைப்பின் மூலம் நமது நாட்டில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் ஏராளமான தொழிலாளர்களின் வியர்வையும், பங்களிப்பும் அடங்கியுள்ளது என்பதை மறுக்க முடியாது. தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலையையும், எட்டு மணி நேர ஓய்வையும், எட்டு மணி நேர உறக்கத்தையும், தொழிலாளர் உரிமைகளையும் போராடிப் பெற்ற வெற்றியை மே தினம் நமக்கு நினைவுப்படுத்துகிறது.
தொழிலாளர் தினத்தை கொண்டாடுவதன் நோக்கம், உழைக்கும் வர்க்கத்தின் மகத்தான முயற்சியை மதிப்பதும், அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு தெரிவிப்பதும், உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக அவர்களை பாதுகாப்பதுமே ஆகும்.
அந்த வகையில் இந்திய அளவில் காட்சி ஊடகங்கள் தொடங்கி கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. அச்சு ஊடகத்தில் கிடைக்கும் சலுகைகள் சட்டபூர்வமாக ஆக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் காட்சி ஊடகத்திற்கு எந்த விதமான சலுகைகளும் சட்டமாக்க படவில்லை.
தற்போது புதிதாக அமைய இருக்கும் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் காட்சி ஊடகங்களில் பணியாற்றி வரும் சுமார் இரண்டு லட்சம் பேருக்கு அரசு சலுகைகள் கிடைக்க சட்டம் இயற்ற வேண்டும்.
பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்.
அதேபோன்று அச்சு ஊடகம் மற்றும் காட்சி ஊடகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் பணி பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
இது அல்லாமல் மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், ஓய்வு பெறும் பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு ஏராளமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதை முறைப்படுத்தி TRADE UNION மூலம் வழங்கப்படும் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் மஜிதா கமிட்டி கூறியுள்ளது போல் ஊடகங்கள் தங்களின் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூபாய் 21000 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், அவர்களின் பணி பாதுகாப்பை அந்தந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும், இவைகளை கண்காணிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் தனி ஆய்வாளரை நியமனம் செய்ய வேண்டும் எனவும் மஜீதா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
மஜீதா கமிட்டியின் பரிந்துரைப்படி அனைத்து நிறுவனங்களும் நடந்து கொள்ள வேண்டும் அப்படி மீறும் நிறுவனங்கள் மீது அரசு இழுத்து பூட்டு போடவும் தயங்க கூடாது எனவும் இந்த தொழிலாளர் தினத்தை முன்னிட்டு “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” கேட்டுக்கொள்கிறது.
மேலும் காட்சி ஊடகங்களில் பணியாற்றி உயிரிழந்த பல குடும்பங்கள் நிர்க்கதியாக இருக்கிறது.
பத்திரிகையாளர் நலனில் அக்கறை காட்டி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த உழைக்கும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு காட்சி ஊடகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் சலுகைகள் கிடைக்க ஆவன செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம் என தமது வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இவன்:
ஜெ.அஸ்கர்
மாநிலச் செய்தி தொடர்பாளர்
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்..
You must be logged in to post a comment.