சாலையில் கேட்பாரற்று கிடந்த 50 ஆயிரம் ரூபாயை எடுத்து, ஆசிரியரிடம் ஒப்படைத்த நான்காம் வகுப்பு மாணவியர் இருவரை, பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.திருச்சி பிராட்டியூர் அருகேயுள்ள புங்கனூரில் புனித வளனார் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவ – மாணவியர் நேற்று (5ம் தேதி) காலை, ‘துாய்மை பாரதம்’ திட்டம் குறித்து விழிப்புணர்வு பேரணி சென்றனர். தாயனூர் மேலக்காடு என்ற இடத்தில் பேரணி செல்லும்போது, சாலையில் பணக் கட்டு கிடந்துள்ளது.
இதைப் பார்த்த 4ம் வகுப்பு படிக்கும் மாணவியரான மதுஸ்ரீ (9), கனிஷ்கா (9) ஆகியோர், அந்த பணத்தை எடுத்து அருகில் இருந்த ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். அவர், பேரணி முடிந்து பள்ளிக்கு வந்ததும், தலைமை ஆசிரியர் மெட்டில்டா ஜெயராணியிடம் பணத்தை ஒப்படைத்தார்.பள்ளியின் தாளாளர் செபாஸ்டின் அந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது, அதில், 50 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. இதையடுத்து, அந்த பணத்தை போலீஸில் ஒப்படைத்து, உரியவரிடம் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். இது குறித்து, தாளாளர் செபாஸ்டின் கூறியதாவது: “இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவரும், நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மதுஸ்ரீயின் தந்தை கல் கொத்துபவர். கனிஷ்காவின் தந்தை பெயின்டர். இந்த இரண்டு மாணவிகளும் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அப்படி இருந்தும், கண்டெடுத்த 50 ஆயிரம் ரூபாயை நேர்மையுடன் ஆசிரியையிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த மாணவியரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களை, பள்ளி சார்பில் கவுரவிக்க உள்ளோம்” என, அவர் தெரிவித்தார்.ஏழ்மையிலும் நேர்மையாக நடந்துகொண்ட மாணவியரை, ஆசிரியர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் பாராட்டினர்.
You must be logged in to post a comment.