விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகர்ப் பகுதிகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரீத்தி உத்தரவின் பேரில், வடக்கு காவல்நிலைய போலீசார் மதுரை – தென்காசி தேசிய நெடுஞ்சாலையில், அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள காவல் சோதனை சாவடியில், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்த போது, அதில் 20 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். புகையிலை பொருட்களை கடத்தி வந்த ராஜபாளையம், காட்டுநாயக்கர் தெரு பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து (24) மற்றும் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூனம்பட்டி பகுதியைச் சேர்ந்த காந்திராஜா (31) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 20 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.