இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிகாலை பஜர் தொழுகை முடித்து விட்டு வந்த முஸ்லிம்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுச் செயலாளர் ஆர் .அப்துல் கரீம் செய்தி குறிப்பில் தெரிவிக்கையில் :-கீழக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா பழக்கங்களும் அதிகமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகப்பெரும் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். கஞ்சா போதையில் உள்ளவர்களால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. கஞ்சா குடித்து விட்டு வீதியில் செல்லும் பெண்களை கிண்டல் செய்கிறார்கள். இதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. பெண் குழந்தைகளின் பெற்றோர் கடுமையான மன உளச்சலில் உள்ளனர். இவை அனைத்தும் அறிந்தும் காவல்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் கொண்டு வருகின்றனர். இன்றைய தினம் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு வந்தவர்கள் மீது கஞ்சா விற்பனை செய்யக் கூடியவர்களும், கஞ்சா பயன்படுத்தக்கூடியவர்களும் கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அதிகமான இரத்தம் வெளியேறியதால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு இதில் உடனடியாக தலையிட்டு கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிந்து கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம். தமிழகத்தில் பல பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகமாகி வருவதால் பொதுமக்கள் நிம்மதி இழந்து விட்டனர். இதை கருத்தில் கொண்டு கஞ்சா விற்பனையை தடுப்பதற்கான முழு முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்…
96
You must be logged in to post a comment.