ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் 3வது முறையாக ஒத்திவைப்பு: வளர்ச்சி பணிகள் முடங்குவதாக கவுன்சிலர்கள் புகார்..!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று 3வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் வளர்ச்சி பணிகள் முடங்குவதாக கவுன்சிலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி ேதர்தல் கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடந்தது. தொடர்ந்து, கடந்த ஜனவரி 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்ெதடுக்கப்பட்டனர்.பின்னர், மாவட்ட ஊராட்சிக்குழு, ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் மற்றும் ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் கடந்த ஜனவரி 11ம் தேதி நடந்தது. அப்போது, நிர்வாக காரணங்களுக்காக தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவுபடி கடந்த ஜனவரி 30ம் தேதி மீண்டும் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது, இரண்டு ஒன்றியங்களிலும் தேர்தலில் வாக்களிக்க கவுன்சிலர்கள் தயாராக இருந்த நிலையில், திடீரென தேதி அறிவிக்காமல் 2வது முறையாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
எப்போது தேர்தல் நடக்கும் என காத்திருந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதையொட்டி, தண்டராம்பட்டு பிடிஓ அலுவலகம், துரிஞ்சாபுரம் பிடிஓ அலுவலகத்தில் ஏடிஎஸ்பி வனிதா தலைமையில், டிஎஸ்பி அண்ணாதுரை, பழனி உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், தண்டராம்பட்டு பிடிஓ அலுவலகத்தில் நேற்று நடக்க இருந்த ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக, திடீரென காலை பிடிஓ அலுவலக தகவல் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மீண்டும் தேதி குறிப்பிடாமல் 3வது முறையாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால் வாக்களிக்க வந்த கவுன்சிலர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
அதேபோல், துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் வாக்களிக்க திமுக கவுன்சிலர்கள் 10 பேரும், பிடிஓ அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அரவிந்த்தும் காத்திருந்தார். ஆனால், அதிமுக கவுன்சிலர்கள் வாக்களிக்க காலை 11 மணி வரை அலுவலகத்திற்கு வரவில்லை.துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 20 கவுன்சிலர்களில், 11 பேர் பங்கேற்றால் மட்டுமே தேர்தல் நடத்த முடியும். கோரம் இல்லாத காரணத்தால், ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று 3வது முறையாக தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது.தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறாததால், 2 ஒன்றியங்களிலும் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, தேர்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் முறையாக மக்கள் பணியாற்ற முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.