நெல்லை தென்காசி மாவட்டங்களில் ஆலயங்களை திறக்கக்கோரி இந்து முன்னணி அமைப்பினர் விசித்திர போராட்டம்..
கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு முழுமையாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி அமைப்பினர் ஆலயங்களின் முன்பு ஒற்றைக்காலில் நிற்கும் விசித்திர போராட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு ஆலயங்களை திறக்க கோரி இந்து முன்னணி சார்பில் ஆலயங்கள் முன்பு ஒற்றைக்காலில் நிற்கும் போராட்டம் நடைபெற்றது.
இந்து முன்னணி மாநில தலைவர் அறிவிப்பை தொடர்ந்து நெல்லை சந்திப்பில் உள்ள சாலை குமாரசாமி கோவிலின் முன்பு மாநில செயலாளர் குற்றால நாதன் தலைமையில் ஒற்றைக்காலில் நிற்கும் போராட்டம் நடைபெற்றது. கோவில்களை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பாளையங்கோட்டை ராஜகோபால மன்னார் சுவாமி கோவில், கைலாசநாதர் கோவில், சொக்கநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில்,பேராட்சி அம்மன் கோவில், ராமர்கோவில், பாளை சிவன்கோவில் உள்ளிட்ட நெல்லையில் உள்ள கோவில்களில் ஒற்றைக்காலில் நிற்கும் போராட்டம் நடைபெற்றது.
சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே உள்ள வைத்தியநாத சுவாமி கோவில் முன்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் காசி விஸ்வநாதர் சுவாமி கோவில் முன்பு நடந்த போராட்டத்துக்கு நகர தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். பொது செயலாளர் நாராயணன், வார்டு தலைவர்கள் சிவமாரி, சூர்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடையம் சிவசைலத்தில் கடையம் ஒன்றிய பொதுச் செயலாளர் பிரபாகரன் தலைமையிலும், கடையத்தில் ஒன்றிய துணை தலைவர் காளிபாண்டியன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. மேலும் வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பிற ஊர்களிலும் இந்த ஒற்றைக்காலில் நிற்கும் நூதனப்போராட்டம் நடைபெற்றது.
ஆலயங்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினர் தொடர்ந்து பல்வேறு நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.