சுரண்டையில் பலத்த சூறைக்காற்று; வாழைக்காய், மாங்காய் விலை கடும் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை..
தென்காசி மாவட்டம் சுரண்டையில் கடந்த 2 தினங்களுக்கு முன் வீசிய பலத்த சூறைக்காற்றில் வாழை, மற்றும் மாங்காய்கள் உதிர்ந்தோடு, வாழை மரங்கள் முழுவதுமாக சாய்ந்து, வாழைக்குலைகள் சேதமைடைந்தன.
கொரோனா கால ஊரடங்கின் பாதிப்பிலிருந்து மீண்டு வர முடியாமல் வறுமையால் வாடும் விவசாயிகள், சாய்ந்து விழுந்த வாழைக்குலைகளை சந்தைக்கு கொண்டு வந்தால் அங்கு அதை என்ன விலைக்கும் வாங்க ஆளில்லை. இதேபோல் மாங்காயும் கேட்பாரற்று கிடக்கிறது.
நல்ல மாங்காய் மிகக்குறைவான விலையில் 5 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் சுமைகூலி கூட கிடைக்காமல் விவசாயிகள் வேதனையின் விளிம்பில் நிற்கின்றனர். மேலும் பல விவசாயிகள் விவசாயத்தால் வாழவும் முடியாமல், அதிலிருந்து மீளவும் முடியாமல் விழிபிதுங்கி வருகின்றனர்.
போதாக்குறைக்கு கொரனா ஒரு பக்கம், விலை வீழ்ச்சி மறுபுறம் என விவசாயிகள் சோதனை மேல் சோதனை அனுபவித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு தகுந்த உதவியும், நிவாரணமும் அரசு வழங்காவிட்டால் இனிவரும் காலங்களில் விவசாயம் என்பது கானல் நீராகிவிடும் என கவலையடைந்துள்ளனர்.
மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு தேவையான நிவாரண உதவிகளை விரைந்து வழங்கிட வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.