தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்; உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றிட மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்..
தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பின்வரும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல்கிஷோர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், சென்னை வானிலை மையத்திலிருந்து தென்காசி மாவட்டத்திற்கு 15.05.2024, 18.05.2024, 19.05.2024 ஆகிய தினங்களில் கனமழை மற்றும் மிக கனமழையும், 16.05.2024 மற்றும் 17.05.2024 ஆகிய தினங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்ட முழுவதும் 15.05.2024. 18.05.2024 மற்றும் 19.05.2024 ஆகிய மூன்று தினங்கள் ஆரஞ்சு Alert என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் ஆறு மற்றும் குளங்களில் நீர்வரத்து அதிகமாக வாய்ப்பு உள்ளதால் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் உரிய எச்சரிக்கையுடனும் பாதுகாப்புடனும் இருந்திட அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், தெரியாத ஆழமும் நீரோட்டமும் உள்ள தண்ணீருக்குள் செல்ல வேண்டாம். மேற்சொன்ன காலங்களில் இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதால் விவசாய தொழிலாளர்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள், இடி மின்னலின் போது வெட்ட வெளியில் நடக்க வேண்டாம் என்றும், மரங்களுக்கு கீழ் பாதுகாப்பிற்காக ஒதுங்க வேண்டாம் என்றும், பெருமழையின் போது காய்ச்சிய குடிநீரினையே பருகி நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது. மழையினால் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் – 1077 அல்லது 04633-290548 என்ற எண்களில் பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.