நான் முதல்வன் திட்டத்தில் பயின்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி மாவட்ட மாணவி; கல்வியாளர்கள் முக்கிய பிரமுகர்கள் பாராட்டு..
தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தில் பயின்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற தென்காசி மாவட்ட மாணவியை கல்வியாளர்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தை சேர்ந்த மாணவி இன்பா. தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்று ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்நிலையில் மாணவி இன்பாவை நேரில் சந்தித்து முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள் பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், செங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.எம். ரஹீம், நூலகர் ராமசாமி, விழுதுகள் சேகர், முத்தரசு, ஆரிஷ் ஆகியோர் மாணவி இன்பாவின் இல்லம் சென்று பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவி இன்பா பேசுகையில், செங்கோட்டை அரசு நூலகத்தில் படித்து வந்ததாகவும், தொடர் விடாமுயற்சியின் பயனாக தேர்வுக்கு தயாராகி தாம் வெற்றி பெற்றுள்ளதாகவும், தேர்வுக்கு படிப்பதற்கு நான் முதல்வன் திட்டம் முக்கிய உதவியாக இருந்ததாகவும் கூறினார். மேலும் தேர்வுக்கு படிப்பதற்கான ஏற்ற சூழல்கள், வசதிகள் அனைத்தும் செங்கோட்டை அரசு பொது நூலகத்தில் அமைந்து இருப்பதாகவும், நான் முதல்வன் திட்டத்தை கொண்டு வந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், செங்கோட்டை அரசு பொது நூலகத்திற்கும் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்