பனை மர ஓலையில் திருமண அழைப்பிதழ்; கவனத்தை ஈர்த்த தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர் திருமாறன்..
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக நல ஆர்வலர் வெங்கடாம்பட்டி பூ.திருமாறன் தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை பனை மர ஓலையில் அழகாக வடிவமைத்து வழங்கி வருவது முதல் இரத்ததானம், விதைப்பந்து உள்ளிட்ட புதுமைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள வெங்காடம்பட்டி பகுதியை சேர்ந்த சமூகநல ஆர்வலர் பூ. திருமாறன். இவரது மகள் மருத்துவர் தமிழ் அருவி. நாகர்கோவில் மருத்துவர் பெசன் ஜாஸ்க்கும், தமிழ் அருவிக்கும் வருகின்ற ஜூன் 10ஆம் தேதி தென்காசி தேவாலயத்தில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது. இத்திருமண விழாவில், மிகப் பிரம்மாண்டமான இரத்ததான முகாம் இலஞ்சி ரதி மகாலில் நடைபெறுகிறது. 10 படுக்கைகள் இரத்த தானத்திற்கு தயாராக இருக்கும் வகையில் திருமாறன், தென்காசி அரசு மருத்துவமனை சூப்பிரண்டெண்ட் மரு.ஜெஸ்லின், ரத்த வங்கி மருத்துவர் பாபு ஆகியோர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இம்முகாமில் சுமார் 100 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டு 400 நோயாளிகள் பயன்பெற திட்டமிடப்பட்டுள்ளது. இரத்த தானம் செய்பவர்களுக்கு அரசு தரப்பிலும், திருமண வீட்டார் தரப்பிலும் என இரண்டு நற்சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், தாம்பூல பைக்கு பதிலாக விதைப்பந்து சுருக்குப்பை, திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. வெற்றிலை பாக்கு, சாக்லேட் என்பதற்கு பதிலாக பூமி வெப்பமயமாதலை தடுக்க தலா 25 மர விதைகள் கொண்ட விதைப்பந்துகள் வழங்கப்படுகிறது. இத்திருமணத்தில், புதுச்சேரி மக்கள் முதல்வர் ரங்கசாமி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணன் பெங்களூர் ரா. சத்திய நாராயண ராவ் கெய்க்வாட், முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் வால்டர் தேவாரம், துணைவியார் பிரேமா தேவாரம், இங்கிலாந்து ரிச்சர்ட், லண்டன் விவியன், டாக்டர் மாதுரி, எமிலி, மலேசியா ஏ.ஜி.திலகன், கெர்லிங் எஸ்டேட் பூனாட்சி என்ற நாகப்பன், ரஜினி குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். இந்த திருமணத்திற்கான அழைப்பிதழ் காகிதத்திற்கு பதிலாக பனை ஓலையில் அழகாக வடிவமைக்கப்பட்டு அச்சிடப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.