6
கீழக்கரை நகராட்சியில் புதிய சொத்து வரி விதிப்பு அமல்படுத்தப்பட உள்ளதாகவும், இந்த புதிய சொத்து வரி விதிப்பில் எவருக்கேனும் ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் எழுத்துபூர்வமாக 30 நாள்களுக்குள் கீழக்கரை நகராட்சி ஆணையாளருக்கு தெரிவிக்கலாம் என்பதாக கடந்த 10 செப்டம்பர், 2018 அன்று கீழக்கரை நகராட்சி சார்பாக தின நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டது.
இதனையடுத்து சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சட்டப் போராளிகள், மக்கள் நல பாதுகாப்புக் கழகம், இஸ்லாமிய கல்வி சங்கம், வடக்குத் தெரு சமூக நல அமைப்பு, SDPI கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கீழக்கரை முஸ்லீம் சங்கம் போன்ற பொது நல, சமுதாய, அரசியல் கட்சிகளை சார்ந்த சட்டப் போராளிகள், பொதுமக்கள் 600க்கும் மேற்பட்டோர் கீழக்கரை நகராட்சியின் புதிய வரி விதிப்பிற்கு ஆட்சேபனை தெரிவித்து மனுக்களை கீழக்கரை நகராட்சி ஆணையாளருக்கு நேரிலும், பதிவுத் தபாலிலும் அனுப்பினர்.
இந்நிலையில் ஆட்சேபனை மனு செய்திருந்த சட்டப் போராளிகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் எவருக்கும் தகுந்த பதிலையும், விளக்கத்தையும், கீழக்கரை நகராட்சி நிர்வாகம் அளிக்காமல் அவசர கோலத்தில் புதிய வரி விதிப்பை நேற்று முதல் அமல்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் பலர் இந்த புதிய சொத்து வரி விதிப்பு குறித்து அறியாமல் 100 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தப்பட்டு இருக்கும் சொத்து வரியை கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
இதனையடுத்து கீழக்கரை நகராட்சி மேலாளர் (ஆணையாளர் பொறுப்பு) தனலட்சுமியை கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தை சேர்ந்த சட்டப் போராளிகள் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் முஹம்மது சாலிஹ் ஹுசைன், சட்டப் போராளி முகைதீன் இபுறாகீம், சட்டப் போராளி நூருல் ஜமான், சட்டப் போராளி ஹமீது யூசுப், முஸ்லீம் லீக் லெப்பை தம்பி உள்ளிட்டோர் இன்று சந்தித்து தங்கள் ஆட்சேபனையை தெரிவித்தனர்.
மேலும் இந்த சந்திப்பின் போது சட்டத்திற்கும், ஜனநாயக மாண்புகளுக்கும் மாறான இந்த புதிய சொத்து வரி விதிப்பினை அரசு விதிகளுக்கு புறம்பாகவும், ஆட்சேபனை மனு செய்திருந்த 600 க்கும் மேற்பட்டவர்களுக்கு உரிய விளக்கம் தராமலும், பொது அறிவிப்பு செய்யாமலும், அவசர கோலத்தில் அமல்படுத்துவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அத்தனையும் மீறி ஏழை எளிய பொதுமக்கள் பாதிக்கப்படும் வகையில் இந்த அநியாய புதிய சொத்து வரி விதிப்பு அமல்படுத்தப்படுமானால், சட்டத்தின் வழியில் நீதிமன்றத்தை நாடி உரிய பரிகாரம் தேடப்படும் என்றும் நகராட்சி ஆணையைர் பொறுப்பு தனலெட்சுமியிடம் சட்டப் போராளிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.