தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய சூழ்நிலையில் வழக்கு பதிவு..
சொத்து பிரச்சினையில் தந்தையை மகன் கொடூரமாக தாக்கும் ‘சிசிடிவி’ வீடியோ காட்சி வைரலான நிலையில், 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கட்டராங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (68). இவருக்கு ஹேமா (65) என்ற மனைவியும், சக்திவேல் (34) எனும் மகனும், சங்கவி (32) எனும் மகளும் உள்ளனர்.
குழந்தைவேலுக்கு சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சார்வாய் பகுதியில் மரவள்ளி கிழங்கு அரவை செய்யும் சேகோ ஆலையும், பெரம்பலுார் பகுதியில் அரிசி ஆலை மற்றும் 100 ஏக்கரில் விவசாயத் தோட்டமும் உள்ளது.
திருமணமான மகன் சக்திவேல் ஆத்துாரில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தலைவாசல் அருகே சார்வாய் பகுதியில் உள்ள சேகோ ஆலை உள்ளிட்ட சொத்துகளை தனது பெயருக்கு எழுதி வைக்கும்படி, தனது தந்தை குழந்தைவேலிடம் சக்திவேல் கேட்டுள்ளார்.
அதற்கு, குழந்தைவேலு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த சக்திவேல், தகராறு செய்து, வீட்டில் உள்ள பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளார் அதன் பின்னர் தந்தையை கொடூரமான முறையில் தாக்கியதில் தந்தை உயிரிழந்தார்.
சொத்து விவகாரத்தில் இருவரிடையே அடிக்கடி தகராறு வந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.