காரைக்காலில் மாவட்டம் முழுவதும் ஏராளமான வெறிநாய்கள் சுற்றித்திரிந்து வந்தன. இதனை கட்டுப்படுத்தவும் அவற்றை பிடிக்கவும் பல்வேறு சமூக நல அமைப்புகள் காரைக்கால் நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தன. அவர்களின் கோரிக்கை மனுவை ஏற்று காரைக்கால் நகராட்சி நிர்வாகம் ஏராளமான வெறி நாய்களை பிடித்தது. ஆனால் புளுகிராஸ் அமைப்பு தலையிட்டு நாய்களை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாகத்தினர் பிடித்து வைத்திருந்த வெறிநாய்களை மீண்டும் தெருவில் விட்டுவிட்டனர். இதனால் மீண்டும் வெறிநாய்கள் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுற்றித்திரிந்து வருகின்றன. இந்த நாய்கள் காண்பவரை எல்லாம் கடித்து குதறி வருகின்றன.
இந்நிலையில் காரைக்கால் நேரு நகரை சேர்ந்த 4 பேரையும் கொத்தலம்பேட் பகுதியைச் சேர்ந்த ஹரிஸ்டன், தெனுஷ்கா ஆகிய சிறுவர், சிறுமி உட்பட 3 பேரையும் வெறிநாய்கள் இன்று மாலை கடித்து குதறியுள்ளன. இவர்கள் அனைவரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தனர். ஆனால் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெறிநாய் கடிக்கு மருந்துகள் இல்லை என்பதால் நான்கு பேர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று வெளி மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளை தேடி சென்றனர்.
சிறுவர், சிறுமி உட்பட 3 பேர் மட்டும் ரெத்த காயங்களுடன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெறி நாய்கள் கடித்து ஒரே நேரத்தில் 7 பேருக்கு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெருக்களில் சுற்றி திரியும் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மீண்டும் காரைக்கால் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.