ஆடு பகை குட்டி உறவு என்கிற பழமொழிக்கேற்ப தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை பிறப்பித்துள்ளது மேலும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் நிலத்தடி நீர், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையினர், நிர்வாகம் அதிகாரிகள், உள்ளாட்சி அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான செயல்களில் ஈடுபட்டு வருவதோடு மட்டுமல்லாது லஞ்ச தேவைகளுக்காக ஸ்டெர்லைட்டின் பிரிவினை / கலவர நிலைகளுக்கு துணை போவது என்பது தூத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாக சீர்கேட்டிற்கு ஒரு முன்னுதாரணமாகும்.
பெரும்பாலான மக்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மனநிலையை கொண்டு உள்ள நிலையில் மாதம் மாதம் பல லட்சம் வேண்டும் என்பதற்காக ஸ்டெர்லைட்டின் ஒவ்வொரு எதிர்மறை செயல்பாடுகளை கண்டுக்கொள்ளாமல் இருப்பது என்பது மிகவும் கண்டிப்பிற்குரிய ஒன்றாகும்.போராட்டங்களுக்கு அனுமதி மறுப்போம் ஆனால் ஸ்டெர்லைட் ஆலையின் உள்ள பராமரிப்பு எனும் பெயரில் ஆலை இயக்க பணிகளுக்கு அனுமதி அளிப்போம் என்கிற தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தின் நிலை எவ்விதத்தில் நியாயமாகும்.
ஊராட்சி செயலாளருக்கு ஒரு கமிஷன், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஒரு வருவாய், சோதனை அதிகாரிகளுக்கு ஒரு கிம்பளம், பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல லட்சம், கண்டுக்கொள்ளாத உயரதிகாரிகளுக்கு கோடி எனவும், இவர்களுக்கு எல்லாம் பணம் பெற்றுக் கொடுக்கும் டோக்கன் சப்ளையருக்கு ஐம்பது லட்சம் என ஸ்டெர்லைட் நிர்வாகம் விரிக்கும் பண வலைகளில் சிக்கி தவிக்கிறது தூத்துக்குடி நிர்வாகம்.
மக்கள் புரட்சிக்கான விதைகளையும், போராட்டத்திற்கான புறநிலைகளையும் எப்போதும் எதிரிகளே வித்திடுகிறார்கள் என்பதற்கு உதாரணமாக தூத்துக்குடியில் முன்பு ஏற்படுத்திய ஒவ்வொரு எதிர்வினைகளுக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் மட்டுமே காரணம் என்பதை மறந்து மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளாத ஒன்றாக உள்ளது.
தன்மைகளை மறந்து தகர்ப்பது போராட்டத்தின் உணர்வானது.! தன்மைகளை உணர்ந்து தணிப்பதே சமூக மாற்றத்தின் தீர்வானது.!
அக்ரி பரமசிவன்:
You must be logged in to post a comment.