“தமிழால் உச்சம் தொட்டவர் டாக்டர் கலைஞர். நெஞ்சுக்கு நீதி கலைஞரின் வாழ்க்கை மட்டுமல்ல. ஒரு காலத்தின் வரலாறு!. என நெல்லை அரசு அருங்காட்சியக கலைஞர் நூற்றாண்டு விழாவில் கவிஞர் பாப்பாக்குடி செல்வமணி பேசினார். முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் இலக்கிய கூட்டத்தின் ஏழாவது கூட்டம் காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி தலைமையில் நடைபெற்றது. புன்னைச் செழியன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். மைய நூலக வாசகர் வட்டத் துணைத் தலைவர் முனைவர் கோ. கணபதி சுப்ரமணியன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் ‘கலைஞரின் நெஞ்சுக்கு நீதி!’ எனும் தலைப்பில் கலை பதிப்பகத்தின் ஆசிரியரும் கவிஞருமான பாப்பாக்குடி இரா. செல்வமணி சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். அவர் பேசும் போது ‘கலைஞரின் நெஞ்சுக்கு கலைஞரின் வாழ்க்கையை மட்டும் சொல்லவில்லை. தி.மு.கழகத்தின் வளர்ச்சியை மட்டும் சொல்லவில்லை. ஒரு நூற்றாண்டு காலத்தின் கால வரலாறாக எழுதப்பட்டிருக்கிறது. எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு தலைவன் தன் சிந்தனையாலும் உழைப்பாலும் உன்னத முயற்சியாலும் உயர்ந்த நிலைக்கு வர முடிந்தது என்பதை காட்டுகின்ற காலக் கண்ணாடி. இளைஞர்கள் படித்து உணர கல்லூரிகளில் பாடப் பகுதியாக சேர்க்க வேண்டியது அவசியம். திரையுலகிலும் அரசியல் உலகிலும் தமிழால் உச்சம் தொட்ட கலைஞரின் வரலாறு. அதனை அவர் விட்டுச் சென்ற ஆண்டுகளுக்கும் எழுதி முடிக்கப்பட்டு முழுமை பெறச் செய்ய வேண்டும்.’ என்றார்.
முன்னதாக தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தின் இணைச் செயலாளர் புத்தனேரி கோ. செல்லப்பா தொடக்க உரையாற்றினார். ஆசிரியர் சிவ. செல்வமாரிமுத்து, சமூக ஆர்வலர் சுரேஷ், அஸ்வின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மின்கழகத் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நடராஜன் மற்றும் திருவருள், லத்தீப் ஆகியோர் மதிப்புரை வழங்கினர். கவிஞர் முத்துசாமி நன்றி கூறினார். நெல்லை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசியை பிரியதர்ஷினி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மேனாள் துணை ஆட்சியர் தியாகராசன் குலுக்கல் முறையில் தேர்வு பெற்ற கஸ்தூரி, பேராசிரியர் ஹரிஹரன் ஆகியோருக்கு நூல்களை பரிசளித்தார். நூற்றாண்டு விழா கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எழுத்தாளர் மு.வெ.ரா. வள்ளி சேர்மலிங்கம், மற்றும் சுத்தமல்லி திருவள்ளுவர் கழகத் தலைவர் சொக்கலிங்கம், சுத்தமல்லி லட்சுமணன், இருளப்பன், தேசிய வாசிப்பு இயக்கத் தலைவர் தம்பான், நெல்லை மணி, தச்சை மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.