லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த தமிழக ராணுவ வீரர் பழனி குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆழ்ந்த இரங்கல்!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் திங்கட்கிழமை இரவு சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் 3 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது.
சீனாவின் தாக்குதல் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதேசமயம் இந்திய&சீன எல்லைப் பிரச்சினையில் மத்திய பாஜக அரசிடம் எந்தவிதமான வெளிப்படைத் தன்மையும் இல்லை. இந்த தருணத்தில் மத்திய அரசு, தேசத்திற்கு நம்பிக்கையூட்டும் வகையில் செயல்பட வேண்டும்.
உயிரிழந்த மூவரில் ஒருவரான ராணுவ வீரர் பழனி, ராமநாதபுரம் திருவாடானை தாலுகா வீரசிங்கம் மடம் பகுதி அருகே உள்ள கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். உயிரிழந்த பழனி அவர்கள் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். வீரமரணம் எய்திய பழனி அவர்களின் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாபெரும் தியாகத்தை நாட்டுக்குச் செய்துள்ள மாவீரர் பழனி அவர்களின் தம்பியும் இராணுவத்தில் பணியாற்றுகிறார் என்பது அவரது குடும்பத்தினரின் அரும்பெரும் தியாக மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
தமிழக ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேள்.
இப்படிக்கு, எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி
You must be logged in to post a comment.