மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மீட்புத் தொகுப்பு:வெறும் புத்திசாலித்தனமான வார்த்தை ஜாலங்கள் மட்டுமே:- எஸ்.டி.பி.ஐ. கட்சி விமர்சனம்!
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஜி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார மீட்புத் தொகுப்பு என்பது எண்ணிக்கையில் பெரிய அளவாக இருந்தாலும் சிறிதளவும் விளங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு இருப்பதாக விமர்சித்துள்ளார்.
அறிவிக்கப்பட்ட தொகை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 10% என அரசு தம்பட்டம் அடித்துக்கொண்டாலும், வெறும் புத்திசாலித்தனமான வார்த்தை ஜாலங்களாகவே புலப்படுகிறது என்றார் அவர்.
உள்ளபடி மத்திய அரசு அறிவித்த தொகையில் ஏற்கனவே பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜ்னா திட்டத்தில் ஒதுக்கப்பட்ட ரூ.1.7 இலட்சம் கோடியும், நாட்டின் பணப்புழக்கம் அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி விடுவித்த ரூ.6.5 லட்சம் கோடியும் உள்ளடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அறிவிக்கப்பட்ட மீட்புத் தொகுப்பில் ஒரு முக்கிய அம்சமான சிறுகுறு நடுத்தரத் தொழில்களுக்கான ஒதுக்கீடு ரூ.3 இலட்சம் கோடி தொகையை சம்மந்தப்பட்டோருக்கு வழங்கும் வரைமுறைகளை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நிர்ணயம் செய்வர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியால் தடுமாறும் சிறுகுறு நடுத்தரத் தொழில்களின் கடன்களை ரத்து செய்யாமலும், கடன்களைச் செலுத்த போதுமான கால அவகாசம் தராமலும் இருக்கும் நிலையில் அரசு அவர்களுக்கு கற்பனையான நிவாரணம் வழங்குவதாகச் சொல்வது எந்தவகையில் பொருத்தமானது என்ற கேள்வியை அவர் எழுப்பினார்.
ஏற்கனவே பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜ்னா திட்டத்தில் மத்திய அரசு அறிவித்த ரூ.1.7 லட்சம் கோடி நிதி இதுவரை முறையாக பாதிக்கப்பட்டோருக்கு சென்றடையவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
கடந்த ஐம்பது நாட்களாக பசிப்பட்டினியால் வாடிவதங்கி இன்றைய நாள்வரை கால்நடையாக தம் ஊர்களுக்கு சென்றுகொண்டிருக்கும் இலட்சக்கணக்கான ஏழை எளிய பாவப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த பொருளாதார மீட்புத் தொகுப்பால் எந்த பயனும் விளையவில்லை என்பது அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர், நாட்டில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் பொருளாதாரச் சீரழிவு பற்றிய புரிந்துணர்வு ஆளும் அரசுக்கு இல்லை என்பது தெளிவாகிறது என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்தார்.
2014 தேர்தல் பிரச்சாரத்தில் இன்றைய பிரதமர் ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் ரூ.15 இலட்சம் வழங்கப்படும் என்ற பொய் வாக்குறுதியை ஒத்தே இப்போதைய பொருளாதார மீட்புத் தொகுப்பும் விளங்குவதாகவும் எஸ்.டி.பி.ஐ. தேசிய தலைவர் எம்.கே.பைஜி வேதனை தெரிவித்தார்.
ஏ.கே.கரீம் ஒருங்கிணைப்பாளர் SDPI கட்சி
You must be logged in to post a comment.