சென்னை மாநகர காவல் ஆணையருடன் SDPI மாநில நிர்வாகிகள் சந்திப்பு!
சென்னை மாநகர காவல் ஆணையராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்களை SDPI கட்சியின் மாநில செயலாளர் அமீர் ஹம்சா, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், வடசென்னை மாவட்ட தலைவர் முகமது ரஷீத் ஆகியோர் இன்று (ஜூலை.30) மரியாதை நிமித்தமாக சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதோடு நேற்று பல்வேறு ஊடகங்களில் சென்னை மாநகரில் ‘ஆடு, மாடுகளை அறுக்க தடை’ என்று பரவலாக வெளியான செய்தி குறித்து கேட்டபோது, வெளி மாநிலங்களிலிருந்து ஒட்டகம் கொண்டுவந்து வெட்ட தடை என்றுதான் தெரிவித்ததாகவும், ஆடு, மாடுகளை அவரவர் மத நம்பிக்கை பிரகாரம் வெட்ட எவ்வித தடையையும் தான் விதிக்கவில்லை என்பதையும் தெளிவுப்படுத்தினார். அவரவர் மத நம்பிக்கை பிரகாரம் ஆடு, மாடுகளை வெட்டுவதற்கு தடையில்லை என்று தெரிவித்த அவர், கொரோனா பரவல் காரணமாக அதற்கேற்ற வகையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அவரவர் இடங்களில் தங்கள் மத நம்பிக்கையை நிறைவேற்றலாம் எனவும் தெரிவித்தார்.
மேலும், குர்பானிக்காக கொண்டுவரப்படும் ஆடு, மாடுகளை தடுத்து நிறுத்தி எவரேனும் பிரச்சினை செய்வது தொடர்பான புகார்கள் வந்தால் அதன்மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எவ்வித பிரச்சினையுமின்றி இஸ்லாமியர்கள் பக்ரீத் தினத்தை கொண்டாட காவல்துறை துணைநிற்கும் எனவும் உறுதியளித்தார்.
ஆகவே, நாளை பக்ரீத் தினத்தில் இஸ்லாமியர்கள் தங்கள் மதக்கடமைகளை நிறைவேற்றுவதில் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் எனவும், கொரோனா காலம் என்பதால் அதுதொடர்பான சமூக இடைவெளி, கூட்டம் கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட அரசு விதித்துள்ள பாதுகாப்பு முறைகளை பின்பற்றி பக்ரீத் தினத்தை கொண்டாடுமாறும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
You must be logged in to post a comment.