இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அறிவியல் மற்றும் தொழிற்சாலைகள் ஆராய்ச்சி கவுன்சில், மத்திய உப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி கூடம், கடற்பாசி ஆராய்ச்சி நிலையம் மண்டபம் மற்றும் ஐதராபாத் தேசிய மீன்வள வாரியம் சார்பில் கடற்பாசி சாகுபடி பயிற்றுநருக்கான 5 நாள் பயிற்சி முகாம் துவக்க விழா நடந்தது.
இராமநாதபுரம் மீன்வளத் துறை துணை இயக்குநர் இ. காத்தவராயன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், மத்திய அரசு தேர்வு செய்த முன்னேறும் மாவட்டங்களில் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியில் கடற்பாசி வளர்ப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்க மீன் வளத் துறையிடம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் திட்ட அறிக்கை கோரியுள்ளார். கடற்பாசி வளர்ப்பிற்கு சாத்தியக்கூறுகள் குறித்து கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ரூ.10 கோடி அளவிற்கு கடற்பாசி கொள்முதல் தனியார் நிறுவனம் முன் வந்துள்ளது என்றார். மத்திய உப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி கூட மண்டபம் கடல் பாசி ஆராய்ச்சி நிலைய பொறுப்பு விஞ்ஞானி முனைவர் கே.ஈஸ்வரன் பேசியதாவது:
ஐதரபாத் தேசிய மீன்வள வாரியம், விஞ்ஞானி ஈ.ஸ்வரன் பேசுகையில், நாம் பயன்படுத்தும் சாக்லேட், ஐஸ்கிரீம் உள்பட உணவு பொருட்கள், பற்பசை, மாத்திரை உள்ளிட்ட 140 வகை பொருட்கள் தயாரிப்பில் கடற்பாசி மூலப்பொருளாக பயன்படுகிறது. இதனால் மீன்வளத் துறையில் கடற்பாசி சாகுபடி மீனவ குடும்பங்களுக்கு மாற்று வருமானம் தரும் பிரதான தொழிலாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. பிரதமரின் நீலப் புரட்சி திட்டத்தில் கடற்பாசி வளர்ப்பிற்கு முன்னுரிமை அளித்துள்ளார். இந்தியாவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்பாசி வளர்ப்பு வர்த்தக ரீதியான தொழிலாக மாறி உள்ளது. பருவ கால மாற்றங்கள், உவர் தன்மை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால 2013ல் முற்றிலும் அழிவின் விளிம்பிற்கு சென்ற கடற்பாசி வளர்ப்பு மத்திய அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் தொழிலான கடற்பாசி வளர்ப்பை சிறப்பாக செயல்படுத்த முழு பயிற்சி தேவை என்பதால், மீன்துறை அதிகாரிகள், மீனவ மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பயிற்றுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஐந்து நாள் பயிற்சியில் கடற்பாசி வளர்ப்பு முறை, சந்தைபடுத்தல், உணவு பொருள் தயாரிப்பில் கடற்பாசி பயன்பாடு குறித்து செயல் விளக்கம், கள பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தமான் உள்பட 8 மாநிலங்களில் கடற்பாசி சாகுபடி விரிவடையும் போது, நாளைய உலகின் கடற்பாசி தேவையை இந்தியா பூர்த்தி செய்யும் என்பதில் மாற்று கருத்தில்லை என்றார். மூத்தவிஞ்ஞானி எம்.கணேசன், தொழில்நுட்ப அதிகாரி எஸ்.திருப்பதி, மீன்வளத் துறை கடல் மேற்பார்வையாளர் நாகராஜன், தொண்டி, நம்புதாளை, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவ மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.