Home செய்திகள்கீழக்கரை செய்திகள் விவசாய இலவச மின்சாரம் ரத்து செய்யும் திட்டத்தை கைவிட விவசாயிகள் சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்..

விவசாய இலவச மின்சாரம் ரத்து செய்யும் திட்டத்தை கைவிட விவசாயிகள் சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்..

by ஆசிரியர்

விவசாய இலவச மின்சாரம் ரத்து செய்யும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும்-தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி வலியுறுத்தல்.

விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று தமிழ் விவசாயிகள் சங்கம் தலைவர் OA. நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க OA.நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அந்த கோரிக்கை மனுவில் விவசாயிகள் சார்பில் அவர் கூறியுள்ளதாவது:-

▪️2020ல் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மின்சாரத் திட்டத்தினால் தமிழக விவசாயிகளின் எதிர்காலம் இருள் சூழ்ந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

▪️கடுமையாக உழைத்து விவசாயம் செய்து வரும் நிலையில் உழைப்புக் கேற்ற ஊதியமும் இல்லை, உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு நியாயமான விலை இல்லை, விவசாயிகள் கடன் சுமையால் விபரீத முடிவுகளை நோக்கி சென்றுவிடும் நிர்பந்த நிலை உள்ளது.

▪️விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தை பெறுவதற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் தமிழகமெங்கும் வரிகொடா இயக்கத்தை நடத்தினார்.தமிழகத்தில் இலவச மின்சாரம் சும்மா கிடைக்கவில்லை.60 உயிர்களை துப்பாக்கி சூட்டிற்கு பலி கொடுத்து அந்த விவசாயப்  போராளிகள்  சிந்திய ரத்தத்திற்கு கிடைத்தது தான் இந்த இலவச மின்சாரம். இன்று அனைத்து விவசாயிகளும் அந்த மின்சாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

▪️ஒரு விவசாய விளை பொருட்களை உற்பத்தி செய்வதற்கு இரவு பகல் என்று பாராமல் கண்ணும் கருத்துமாக உழைத்தால் தான் அந்த உணவுப் பொருளை உற்பத்தி செய்ய முடியும் , இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகிவிடும்.

▪️மத்திய அரசு 1 ஹச் பி ஒன்றுக்கு ரூ 20.000 கட்டவேண்டும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ஒரு விவசாயி 3 ஹச் பி வைத்து உபயோகிப்பதால் வருடத்திற்கு ரூ 60.000 செலுத்தினால் தான் விவசாயம் செய்யும் சூழ்நிலை உள்ளது. இந்த புதிய மின்சாரத் திட்டத்தினால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாட்டின் முதுகெலும்பாக விளங்கிடும் விவசாயம் அழிந்துவிடும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.

▪️மத்திய மாநில அரசுகளே புதிய மின்சார திட்டத்தை மாற்றியமைத்து விவசாயிகளின் இலவச மின்சாரத்தை உறுதிபடுத்தி விவசாயத்தை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாக நாராயணசாமி மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!