இராமநாதபுரம், ஆக.8- எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை சிறைபிடித்த மண்டபம் மீனவர் 9 பேரை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் இன்று (08/08/2023) விடுதலை செய்து உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி தளத்தில் இருந்து 260 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஜூலை 24 காலை கடலுக்குச் சென்றன. இப்படகுகள் அன்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்து விட்டு ஜூலை 25 அதிகாலை கரை திரும்பின. அப்போது, கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகளில் இருந்த 9 மீனவர்களை சிறைபிடித்தனர். விசாரணையில், மண்டபம் அருகே சுந்தரமுடையான் தில்லை நாச்சியம்மன் குடியிருப்பு வேலு என்பவரது படகில் சென்ற சுரேஷ் (டிரைவர்) ஆறுமுகம், மணிகண்டன், குமார், உச்சிப்புளி அருகே வட்டான்வலசை நாகநாதன் என்பவரது படகில் சென்ற ஜெயசீலன் (டிரைவர்), நல்லதம்பி, வேல் முருகன், முத்திருளாண்டி ஆகியோர் என தெரிந்தது. இவர்கள் 9 பேரை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று அங்குள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி கஜநீதிபாலன் உத்தரவில் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நிபந்தனைகளின் படி, 9 மீனவரையும் விடுதலை செய்து, படகுகள் மீதான விசாரணையை செப். 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து அன்றைய தினம் 2 படகுகளின் உரிமைகள் ஆஜராக வேண்டும் என நீதிபதி கஜநீதி பாலன் உத்தரவிட்டார். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் விரைவில் சொந்த ஊர் திரும்ப உள்ளனர். இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற விசைப்படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டபம் விசைப்படகு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.