பிரதமரின் ஊரடங்கு உத்தரவையடுத்து கொரோனா வைரஸ் பரவாமலிருக்க நாம் அனைவரையும் வீட்டிலிருக்க சொல்லி விட்டு , நம் நலனுக்காக தினமும் காலை முதல் மாலை வரை பணியாற்றும் காவல், மருத்துவம் சுகாதாரத் துறையினர் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள், போலீஸ் நண்பர்கள் குழுவினர் ஆகியோரின் பணியை ஊக்குவிக்கும் வகையில் முகக்கவசம், தண்ணீர் பாட்டில்கள், கையுறை, கிருமி நாசினி மற்றும் உணவு பண்டங்களை மார்ச் 27 முதல் பார்த்திபனூர், ராமநாதபுரம் நகர், தேவிபட்டினம், திருப்புல்லாணி உள்பட மாவட்டம் முழுவதும் தினமும் 200 கி.மீ., பயணித்து வழங்கி வருகிறார்கள்.
ராஜா மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள தற்காலிக காய்கறி சந்தைக்கு தினமும் காலை 7:30 மணி முதல் 10:30 மணி வரை வருவோரின் கைகளில் ஆவியாகக் கூடிய கிருமி நாசினி ரெட் கிராஸ் உறுப்பினர்கள் மூலம் தெளிக்கப்படுகிறது. தினமும் 15 முறை கை கழுவுதல் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது.
இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்றோர், தனியார் விடுதியில் உள்ள வட மாநிலத்தவருக்கு பிரட், பிஸ்கட், தண்ணீர் பாட்டில்களை தாசில்தார் அப்துல் ஜபார் தலைமையில் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் மூலம் வழங்கப்பட்டது.
மங்களூருவில் இருந்து திரும்பிய நிலையில் முதுகுளத்தூர் அரசு கலை கல்லூரி, அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சோணை மீனாள் கல்லூரி ஆகியவற்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது. மண்டபம் பேரூராட்சி தூய்மை காவலர்கள் 50 பேருக்கு முகக்கவசம், கையுறை, கை கழுவ சோப் வழங்கப்பட்டது. முதல்வர் மருத்துவ காப்பீடு திட்ட ரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்குரியவர்களை அவர்கள் வீட்டில் இருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு பின் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், மண்டபம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, கீழக்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் உரிய நேரத்தில் பணிக்கு ரெட் கிராஸ் வாகனம் மூலம் அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.
இச்சேவைகள் அனைத்தையும் தன்னார்வலர்கள், ரெட் கிராஸ் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அளித்த நன்கொடை மூலம் தொய்வின்றி நிறைவேற்றி வருவதாக ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம்.ராக்லாண்ட் மதுரம் தெரிவித்தார்.
You must be logged in to post a comment.