ராமநாதபுரத்தில் புதிய கடை திறப்பு 5 பைசாவுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி

ராமநாதபுரம் பட்டணம் காத்தான் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அஞ்சறை பெட்டி பிரியாணி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களின் கவனத்தை தனது புதிய கடை மீது திருப்ப கடை உரிமையாளர் 5 பைசாவுக்கு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி இன்று மட்டும் வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

நாளை(05.9.2020) முதல் சிக்கன் பிரியாணி 160 ரூபாய், மட்டன் பிரியாணி 190 ரூபாய்க்கும் விற்கப்பட்ட உள்ள நிலையில் இன்று (04.9.2020) மட்டும் 5 பைசாவுக்கு ஒரு பிளேட் சிக்கன், பிரியாணி வழங்கப்படும் என புதிதாக துவங்கபட்ட அஞ்சறை பெட்டி பிரியாணி கடை உரிமையாளர் ஃப்ரத் அறிவித்து இருந்தார் இதையடுத்து இன்று (04.9.2020) காலை முதலே வாடிக்கையாளர்கள் அதிகமானோர் பிரியாணி வாங்க 5 பைசா நாணயத்துடன் கடைக்கு வர தொடங்கினர். ஒவ்வொருரிடமும் ஐந்து பைசாவை வாங்கி கொண்டு ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி, தால்சா, தயிர் வெங்காயம் பார்சல் கொடுத்தனர். யாரிடம் 5 பைசா இருக்கும் என நினைத்துக் கொண்டு இருக்கும்போது இவ்வளவு பேர் வந்து இருந்தது ஆச்சரியம்தான் என கடைக்கு பிரியாணி வாங்க வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த மக்கள் கூறிச் சென்றனர்.இது குறித்து பிரியாணி கடை உரிமையாளர் ஃப்ரத் கூறுகையில், நான் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மதியம், இரவு என இரண்டு வேளைக்கான பிரியாணி கடை இன்று புதிதாக திறந்துள்ளேன். புதிய பிரியாணி கடை மீது வாடிக்கையாளர்களின் கவனம் திரும்ப வேண்டும் என்பதற்காகவும், நாணயங்களின் பெருமையை இளம் தலைமுறையினர் உணர வேண்டும் மற்றும் பழைய நாணயங்களை சேகரித்து வைத்திருப்பவர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டத்தை செயல்படுத்தினோம். இதுவரை 150 க்கும் மேற்பட்டோர் தங்களிடம் இருந்த 5 பைசா நாணயத்தை கொடுத்து பிரியாணி வாங்கி செல்கின்றனர்.மேலும் இதை அறிந்த ராமநாதபுரம் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த வாடிக்கையாளர்கள் பலர் வந்த வண்ணம் உள்ளனர். என்றார்.