ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கீழக்கரை,மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் ஒரு பெண் உள்பட 10 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பரமக்குடியைச் சேர்ந்த இருவர், 28 நாள் சிகிச்சைக்கு பின் குணமாகி வீடு திரும்பினர். எஞ்சிய 8 பேர், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுகின்றனர். இந்நிலையில், மண்டபம் தண்டையல் தெருவில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டவரின் பெற்றோர் மற்றும் உறவினர் என 4 பேரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருடனும், அவரது வீட்டோருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தோர் உள்பட அப்பகுதியில் உள்ள 570 வீடுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கொரானா அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல் குறித்து ராமநாதபுரம் சுகாதார நலப்பணி துணை இயக்குநர் அஜீத் குமார் தலைமையில் மண்டபம் அரசு மருத்துவர்கள் பாக்யநாதன், தாமோதரன், சுகாதார ஆய்வாளர் மெய்.ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் டெங்கு தடுப்பு பணியாளர்கள் 20 பேர் ஈடுபட்டுள்ளனர். செயல் அலுவலர் கி. ஜனார்த்தனன், இளநிலை உதவியாளர் சுப.முனியசாமி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பேரூராட்சி பணியாளர்கள், தூய்மைக்காவலர்கள் கிருமி நாசினி தெளிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் போலீசார் , தண்டையல் தெருவில் உள்ளோர் யாரும் வெளியே செல்லாதவாறும், வெளி நபர்கள் உள்ளே வராமலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வீடுகளில் உள்ளோருக்கு பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ், சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ரா.ராஜா ஆகியோரின் அறிவுறுத்தல், வழிகாட்டுதல் படி சுகாதாரப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
8
You must be logged in to post a comment.