WJUT
WORKING JOURNALISTS UNION OF TAMILNADU
பத்திரிகையாளர்கள், பயன்படுத்தும் வாகனங்களில் PRESS, MEDIA, ஊடகம் என்று ஸ்டிக்கர் ஒட்ட தடையா..? முறைப்படுத்துமா சென்னை பெரு நகர காவல்துறை.? “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” கோரிக்கை..
இது சம்பந்தமாக “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச்செயலாளர் பா. பிரதீப்குமார், மாநில பொருளாளர் இரா.ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சென்னை பெரு நகர போக்குவரத்து காவல் துறை கடந்த 27-04-2024 அன்று வெளியீட்டுள்ள செய்தி வெளியீடு எண்.89/04/2024 பத்திரிகை, ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களிடையே பெரும் குழப்பத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.
பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகை, ஊடக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களில் PRESS அல்லது MEDIA என்ற அடையாள ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறை இந்திய அளவில் நடைமுறையில் உள்ளது.தமிழக அரசு, அரசின் செய்தித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு வாகன அடையாள ஸ்டிக்கர்களை வழங்கி வருகிறது.
ஊடகங்களில், பத்திரிகைகளில் பணிபுரியும் அனைவருக்கும் அரசின் வாகன அடையாள ஸ்டிக்கர்கள் வழங்குவதில்லை, நடைமுறையில் அது சாத்தியமும் இல்லை என்றிருக்கக் கூடிய நிலையில் காவல் துறையின் செய்தி வெளியீடு நமக்கு மிகப்பெரிய குழப்பங்களையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.
பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணியாற்றுவோர் அவரவர் நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்துள்ளனர்.
பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் என்பதை உரிய ஆவணங்கள் அடிப்படையில் அல்லது எங்களைப்போன்ற அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் மூலமாக வழங்கப்படும் அடையாள அட்டைகளை ஆய்வு செய்து உறுதி படுத்தி கொள்ளுங்கள்.
இரவு நேரப்பணி, விபத்து, இயற்கை பேரிடர் என பல சூழல்களில், செய்தி சேகரிக்கும் பணியின் போது வாகனத்தில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் பத்திரிகையாளர்கள் என்று அடையாளம் காண்பதற்கு காவல்துறைக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் உதவியாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
முறைகேடாக ,தவறாக, போலியாக, பத்திரிகை ஊடக அடையாளத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உறுதியாக இருக்கிறது.மாறாக சரியான திட்டமிடல் இல்லாமலும் தெளிவில்லாமலும் இப்படி ஒரு முன்னெடுப்பு எடுக்கப்படும் போது உண்மையான பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும்.
பத்திரிகை, ஊடகங்களுக்கு தொடர்பில்லாதவர்கள், சமுக விரோதிகள் ஊடகம் PRESS என்று போலியாக பயன்படுத்துவதை சட்டப்படி உறுதியாக தடுக்க வேண்டும் என்பதில் “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” உறுதியாக இருப்பதுடன் அரசுடன், காவல் துறையுடன் முழு ஒத்துழைப்பு தரவும் தயாராக உள்ளோம்.
இந்த நடவடிக்கைக்கு வாகன தணிக்கை உள்ளிட்ட செயல்பாடுகளை முறையான திட்டமிடலுடன் செயல்படுத்தி போலியாக எவரும் பத்திரிகை ஊடக அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் காவல் துறையை கேட்டுக் கொள்கிறோம்.
காவல் துறை-பத்திரிகையாளகர்கள் மத்தியில் எப்பொழுதும் நல்லுறவு தழைக்க வேண்டும் எனவும்”தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” விரும்புகிறது என தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இவன்:
ஜெ.அஸ்கர்
மாநிலச் செய்தி தொடர்பாளர்
தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்..
You must be logged in to post a comment.