தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் விரைந்து வழங்க வேண்டும் என தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தென்காசி ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழையும் போதுமான அளவு இல்லை மற்றும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகள் கடுமையான நஷ்டம் அடைந்துள்ளனர். மேலும் தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் குற்றாலத்தில் தண்ணீர் வரத்து இல்லாமல் குளம் குட்டைகள் தண்ணீரின்றி வறண்டு போய் உள்ளது. மேலும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிர், காய்கறி உள்ளிட்ட விளைபொருட்கள் தண்ணீரின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும் வறண்டு கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் நெல் நாற்றுகளை ஆடு, மாடுகளாவது மேயட்டும் என்ற எண்ணத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். ஆதலால், தாங்கள் தென்காசி மாவட்ட விவசாய பெருமக்களின் சிரமத்தை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண தொகையை விரைவாக பெற்றுத்தர வேண்டும். வரும் காலங்களில் வறட்சி ஏற்படாத வண்ணம் தென்காசி மாவட்டத்தில் உள்ள இரட்டைகுளம், ஊத்துமலை கால்வாய்களை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.