கடையநல்லூர் நகராட்சி சார்பில் எனது நகரம் எனது பெருமை என்ற கோஷத்துடன் உறுதி ஏற்கப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் “எனது நகரம் எனது பெருமை” என்ற முழக்கத்துடன் கடையநல்லூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர். தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் ஆணைக்கிணங்க கடையநல்லூர் நகராட்சியில் “எனது நகரம் எனது பெருமை” என்ற ஒற்றைக் கோஷத்தோடு நகராட்சி ஆணையர் சுகந்தி தலைமையில் பொதுமக்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கடையநல்லூர் நகராட்சி காமராஜர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தூய்மை உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு சுகாதார அலுவலர் பிச்சையா பாஸ்கர் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை இந்தியா திட்ட பரப்புரை மேற்பார்வையாளர் முத்துமாரி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில், எனது நகரம் எனது பெருமை எனது நகரத்தை தூய்மையாக சுத்தமாக வைத்திருப்பது எனது கடமையும் பொறுப்பும் ஆகும். தூய்மை பணிகளுக்கு என்னை அர்ப்பணித்துக் கொள்ள எனது நேரத்தை நான் ஒதுக்குவேன். பொது இடங்களில் குப்பைகளை கொட்ட மாட்டேன். பிறரையும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டேன். குப்பையை வீட்டிலேயே பிரித்து தூய்மை பணியாளரிடம் கொடுப்பேன். தூய்மை நகருக்கான எனது ஆர்வத்தில் என்னைச் சார்ந்தவர்களும் பங்கேற்க ஊக்குவிப்பேன். நகரத் தூய்மைக்கு பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருப்பதே ஒரே காரணம் என்பதை நம்புகிறேன். என்னால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் எனது நகரத்தை தூய்மையாக வைக்க பேருதவி செய்யும் என நான் உறுதியாக நம்புகிறேன் என்ற வாசகங்கள் அடங்கிய உறுதி மொழியை டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள், பொதுமக்கள், துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து ஏற்றுக் கொண்டனர்.
தூய்மை உறுதிமொழி ஏற்புக்கு பின் நகராட்சி பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை பேருந்து நிலையம் ஆகியவற்றில் உள்ள சுவரொட்டிகளை கிழித்து தூய்மைப்படுத்தினர். மேலும் நகரத் தூய்மைக்கு நகராட்சி அதிகாரிகள் ஒரு சேர பாடுபடும் காலகட்டத்தில் நகரில் குறிப்பாக காமராஜர் பேருந்து நிலைய வளாகத்தில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இலவச கழிப்பறை வசதியை பெற முடியவில்லை. இதனை காவல் துறையினர் மூலம் ஒழுங்குபடுத்த நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும். தினசரி மார்க்கெட் செல்லும் வழியில் மற்றும் அரசு மருத்துவமனை பேருந்து நிலையம் முன்பும் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் உள்ளது. அவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாக துறையினர் இணைந்து அப்புறப்படுத்த வேண்டும். காமராஜர் பேருந்து நிலைய வளாகத்தின் வெளிப்புறம் அனுமதி இன்றி ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்ற வேண்டும். இதன் மூலம் மட்டுமே நகரை தூய்மையாக்க முடியும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.