நெல்லையில் தேர்தல் திருவிழா; மேலதாளம் முழங்க வாக்களிக்க அழைப்பு..
நெல்லையில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் முயற்சியாக வாக்காளர்களை வாக்களிக்க பாரம்பரிய முறைப்படி வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கு பதிவு செய்திட வரவேற்கும் வகையில் மேள தாளம் முழங்க பாரம்பரிய முறைப்படி என்.ஜி.ஓ காலனி விசுவாசம் (வயது 87) என்பவருக்கு மாநகராட்சி ஆணையாளர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், உதவி ஆட்சியர் (பயிற்சி) கிஷன்குமார், தேர்தல் அழைப்பிதழை வழங்கி, தவறாமல் வாக்களிக்க வருமாறு கேட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து, அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து முதற்கட்டமாக மூத்த குடிமக்கள் (85 வயதிற்கு மேற்பட்டவர்கள்) இல்லத்திற்கு நேரில் சென்று, தேர்தலில் வாக்காளிக்குமாறு அழைப்பிதழ் வழங்கி, அழைப்பு விடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் திருநெல்வேலி வருவாய் கோட்டாட்சியர் கண்ணா கருப்பையா, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர்/உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அர்பித் ஜெயின், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாக்கியலெட்சுமி, இராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்/உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகாம சுந்தரி ஆகியோர் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று பாரம்பரிய முறைப்படி மேள தாளம் முழங்க தேர்தல் அழைப்பிதழை வழங்கி, தேர்தல் திருவிழாவில் பங்கேற்று தங்களது வாக்குகளை பதிவு செய்யுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும், தேர்தல் திருவிழா என்ற அடிப்படையில் ஏப்ரல் 13-அன்று மிதிவண்டி பேரணி, மேடை காவல் நிலையம் மற்றும் வ.உ.சி மைதானம் அருகில் நடைபெற உள்ளது. பாராம்பரிய விளையாட்டுகள், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக மாதிரி வாக்குப்பதிவு உள்ளிட்ட பல்வேறு முறையில் இளம் வாக்காளர்கள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி, தேர்தல் உன்னதத்தை கொண்டு செல்லும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறலுக்கு cVIGIL App மூலம் புகார் தெரிவிக்கலாம். உங்களது புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாக்காளர்கள் தங்கள் சந்தேகங்களை 1950/1800 425 8373 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சென்ற தேர்தலின் போது குறைவான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ள வாக்குச் சாவடிகளை தேர்வு செய்து அப்பகுதிகளிலுள்ள தெருக்கள், வீடுகளில் தேர்தல் விழிப்புணர்வு மேற்கொள்ளும் பணிகள் வாக்காளர் கல்வியறிவு இயக்கத்தினை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் மூலம் குறைந்த வாக்குப்பதிவு பகுதிகளிலும், பிற இடங்களிலும் இளம் வாக்காளர்கள், பொதுமக்கள், அனைவரிடமும் வீடு வீடாக சென்று 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு, தேர்தல் வாக்குப்பதிவு நாள் 19.04.2024 அன்று நடைபெறவுள்ளது என்பதை நினைவூட்டும் வகையில் அவ்வீடுகளில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் ஒட்டி வருகிறார்கள். இந்நிகழ்வில், பாளையங்கோட்டை வட்டாட்சியர் சரவணன், துணை வட்டாட்சியர் பாலசந்தர், ஓய்வூதிய சங்கத்தினர் ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன், நல்லபெருமாள், சீதாராமன், சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.