பாளை வணிக வளாகத்தின் கீழ் தளத்தில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் எதிர்புறம் உள்ள வணிக வளாகத்தில் அரசன் பேக்கரி அமைந்துள்ள தளத்திற்கு கீழ் தளத்தில் கிப்ட் பொருள்கள் விற்பனை செய்யும் கடை இயங்கி வருகிறது.இந்த கடையில் கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் மின்கசிவின் காரணமாக தீப்பற்றியது. திடீரென புகை வருவதை அறிந்த கடை ஊழியா்கள் உடனே இது குறித்து அருகிலுள்ள பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். மாவட்ட தீயணைப்பு அலுவலா் மகாலிங்க மூா்த்தி தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
தீயில் கருகி கடையில் இருந்த உயர் தர வாசனை திரவிய பாட்டில்கள் வெடித்து சிதறியது. இதனால் தீ அதிகமாகி அருகிலிருந்த பூங்கொத்து விற்பனை செய்யும் கடைக்கும் பரவியது. இரு கடைகளிலும் உள்ள பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.தொடர்ந்து எரிந்து வரும் தீயை அணைக்க பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களும், பேட்டை, நான்குநேரியிலிருந்து தலா ஒரு தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டு தீயினை அணைக்கும் பணி முடுக்கி விடப்பட்டது. எனினும் கடுமையான புகை காரணமாக உள்ளே செல்ல இயலவில்லை. கடையின் பின்புறம் உள்ள சுவரை உடைத்து உள்ளே புகுந்து தீயணைப்பு வீரா்கள் கடுமையான இரண்டு மணி நேர போராட்டத்திற்கு மத்தியில் தீயை அணைத்தனர். பொருள் சேதம் மட்டுமே ஏற்பட்டது. உயிர்சேதம் இல்லை. மேலும் தீப்பற்றிய சிறிது நேரத்தில் பாளை அரசன் பேக்கரி தீப்பற்றி எரிவதாக சமூக வலைத்தளங்களில் தவறாக செய்தி பரவியது. ஆனால் தீப்பற்றி எரிந்தது அரசன் பேக்கரிக்கு கீழ் தளத்தில் அமைந்துள்ள பரிசு பொருட்கள் விற்கும் கடை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.