Home செய்திகள் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் பாரம்பரியம் மற்றும் தேசிய வாக்காளர் தின விழா…

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் பாரம்பரியம் மற்றும் தேசிய வாக்காளர் தின விழா…

by mohan

நெல்லை அருங்காட்சியகத்தில் தமிழ் பாரம்பரியம் மற்றும் தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி 24.01.2022 திங்கள் கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் “நமது தமிழ்ப் பாரம்பரியம் என்பது நீண்ட பெருமையுடையது. உலக நாகரிகத்திற்கே முன்னோடியாகத் திகழ்வதே நமக்குரியத் தனிச் சிறப்பாகும். இத்தகைய பெருமைமிகுந்த நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் இங்கு கூடியிருக்கும் இளைய தலைமுறையினர் பாதுகாக்க வேண்டும் “எனக் குறிப்பிட்டார். தூய யோவான் கல்லூரி மாணவர் சூரியா வரவேற்புரை வழங்கினார். பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா “தேசிய வாக்காளர் நாள்” குறித்து சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில் “ஒவ்வொரு குடிமகனும் வாக்காளன் என்பதில் பெருமையடைய வேண்டும். நமது ஜனநாயகத்தின் ஆணிவேரே வாக்குரிமை தான். அதன் சிறப்புகளை இளைய சமுதாயத்தினர் வீடெங்கும், வீதியெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும். நாட்டின் பெருமைமிகு நாட்களான சுதந்திர நாள்,குடியரசு நாள் ஆகிய நாட்களைப்போல தேசிய வாக்காளர் நாளையும் கொண்டாட வேண்டும் ” எனக் குறிப்பிட்டார். நிகழ்ச்சியில், பொதிகைத் தமிழ் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றுகளையும் மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி வழங்கினார். திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் நந்தினி,யமுனா,ஞான பெல்சியா,தூய யோவான் கல்லூரி மாணவி ரேணுகா,மீனாட்சி சுந்தரம்,தூய சவேரியார் கல்லூரி மாணவி ஆறுமுகவடிவு,உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கலையாசிரியர் க.சொர்ணம் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com