கொரோனா கால ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமலில் உள்ளது. இந்த கால கட்டத்திலும் ஆதரவற்ற நிலையில் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், ஏழை எளியவர்கள், பல்வேறு பகுதிகளில் உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இது போன்றவர்களை கண்டறிந்து உணவு மற்றும் மருத்துவ வசதி அளித்து உதவும் சீரிய பணிகள் மற்றும் மீட்பு பணிகள் பசியில்லா தமிழகம் தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆதரவற்ற நிலையில் பசியுடன் வாழ்ந்து வந்த முதியவர் ஒருவரை கண்டறிந்து பசியில்லா தமிழகம் தன்னார்வலர்கள் மீட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் ஆதரவற்ற முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார். இந்த ஊரடங்கு நேரத்தில் உணவின்றி தவித்துள்ளார். உண்ண உணவின்றி நான்கு நாட்களாக தொடர்ந்து பட்டினி கிடந்துள்ளார். பசிக் கொடுமையால் நகர கூட முடியாமல் இருந்தார். அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் பசியில்லா தமிழகம் அறக்கட்டளையை தொடர்பு கொண்டார். உடன் அவரை மீட்டு முதலுதவி செய்து பசியில்லா தமிழகம் ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி மாநகராட்சி ஆதரவற்றோர் இல்லம் தற்காலிக முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டது. முதியவருக்கு உணவளித்து சற்று ஓய்வெடுக்க வைத்தனர். மேலும் இன்று காலை மருத்துவமனையில் அனுமதித்து தொடர்ந்து சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் கூறுகையில், கொரோனா கால கட்டத்தில் நாம் அனைவரும் எதிர்காலத்தை சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இது போன்ற நபர்களை நாம் அனைவரும் சிந்திக்க மறந்து விட்டோம். கொரோனா காலத்தில் ஏழை எளிய ஆதரவற்ற மக்களுக்கு தேவையான உதவிகளை அனைவரும் செய்ய முன்வர வேண்டும். மேலும் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வரும் இது போன்ற நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா காலத்தில் ஆதரவற்றவர்கள் மீட்பு மற்றும் உதவிக்கு பசியில்லா தமிழகம் அறக்கட்டளையின் இந்த எண்ணில் 8883340888 தொடர்பு கொள்ளலாம்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.