சுரண்டை சுற்றுவட்டார பகுதிகளில் துள்ளி குதித்து விளையாடி வந்த புள்ளி மான் பத்திரமாக மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சுரண்டை, ஆலடிப்பட்டி, கீழச்சுரண்டை ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக புள்ளிமான் ஒன்று சுற்றி வருவதாக பொதுமக்கள் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அந்த புள்ளிமான் சுரண்டை ஆலடிப்பட்டி சமுதாய நலக்கூடம் அருகே உள்ள முட்புதரில் சென்றதை பார்த்த சிறுவர்கள் சுரண்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ், எஸ்எஸ்ஐ திருமலை ஆகியோர் விரைந்து வந்து புள்ளி மான் குறித்து சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கும், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த ஆலங்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர் சுடலை வேல் தலைமையிலான வீரர்கள் மானை மீட்க போராடினர். அப்போது துள்ளிக் குதித்த மான் அருகிலிருந்த வீட்டுக்குள் புகுந்தது உடனடியாக விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் அம் மானை லாவகமாக பிடித்து அதனை கயிற்றால் கட்டி தீயணைப்பு வாகனத்தில் ஏற்றி ஆலங்குளம் வனத்துறை ஒப்படைப்பதற்காக கொண்டு சென்றனர்.பிடிபட்ட மானுக்கு சுமார் 5வயது இருக்கும், மேலும் அதன் பின்னங்காலில் பலத்த அடி பட்டிருந்தது. ஏற்கனவே மானூர் மற்றும் ஆலங்குளம் வனப்பகுதியில் இருந்து புள்ளிமான்கள் வீகேபுதூர், சுரண்டை ஆகிய பகுதிகளுக்கு வழிதவறி வருவதும், அதனை மீட்டு மீண்டும் வனப்பகுதியில் விடுவதும் வாடிக்கையாக உள்ளது. புள்ளிமானை பார்க்க வந்த பொதுமக்கள் தீயணைப்பு மற்றும் காவல்துறையினரின் சேவைகளை பாராட்டினர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.