நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்ட உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி 29.12.2020 செவ்வாய்க்கிழமை நடந்தது. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 23 முதல் டிசம்பர் 29 ஆம் தேதி வரை ஒரு வார காலம் தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரமாக தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகமும் பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து இன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்டம் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்திய வள்ளி தலைமை ஏற்று உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில், “தமிழையும்,தமிழ் பண்பாட்டையும் காக்க வேண்டியது இளந் தலைமுறையினரின் மிக முக்கிய கடமை” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் பேரா சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில் “தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் வளர்ச்சிப் பணித் திட்டங்கள் ஏராளமாக நடைபெற்று வருகிறது.
தமிழ் ஆர்வலர்கள் மற்றும் தமிழறிஞர்களுக்கு பல விருதுகள் பல வழங்கியும் சிறப்பித்து வருகிறது.தமிழ்மொழி வளர்ச்சிக் கென அதிகமான நிதி ஒதுக்கீடு செய்தும், பல புதிய திட்டங்களையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் அருங்காட்சியக துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் நடைமுறைப்படுத்தி, தமிழ் உலகமெங்கும் நிமிர்ந்து நிற்க வைத்திருப்பதை நாம் பார்த்து மகிழ்ச்சி அடைந்து வருகிறோம். இளந்தலைமுறையினர் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் அமைக்கவும் , தமிழ் வளர்ச்சிப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் வேண்டும்” என்று தெரிவித்தார்.நெல்லை மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் கனகலட்சுமி முன்னிலை வகித்தார். கலை ஆசிரியை சொர்ணம், ஓவிய ஆசிரியர் முருகையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழ் ஆட்சி மொழி சட்டம் வார உறுதி மொழியை ஏற்றனர்.நிறைவாக மூத்த தமிழ் அறிஞர் சுப்பையா நன்றி கூறினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.