தென்காசி மாவட்டத்தில் கொரோனாவை காரணம் காட்டி சிகிச்சையளிக்க மறுக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு எதிராக விரைவில் போராட்டம் நடத்தவிருப்பதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜலாலுதீன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பின் கூறியுள்ளார்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில் என ஐந்து நகராட்சிப் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. இந்த அரசு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டதின் நோக்கமே ஏழை எளிய மக்களுக்கு முறையான மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பது தான். ஆனால், தற்போது தென்மேற்கு பருவமழை காலங்களில் ஏற்படும் தட்பவெப்ப நிலை மாற்றத்தால் நம் மாவட்டத்திலுள்ள தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி உள்ளிட்ட பல ஊர்களில் மக்களுக்கு அதிக அளவு சளியுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.மேலும் இருதயக் கோளாறு, சுவாச பிரச்சனை,இரத்த அழுத்தம்,சக்கரை வியாதி, சிறுநீரக டயாலிசிஸ் போன்ற நோய்களுக்கு மருத்துவம் செய்ய அரசு மருத்துவமனைகளை நாடினால் அரசு மருத்துவர்கள் கொரானொ வைரஸை காரணம் காட்டி எந்த சிகிச்சையும் அளிக்க மறுக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மருத்துவம் செய்யாமலே வீடுகளில் நோயுடன் முடங்கிக் கிடக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன், வயது முதிர்வின் காரணமாக கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட வயதான ஏழை பெண்மணி ஒருவருக்கு மருத்துவம் செய்ய மருத்துவமனையை அணுகினால், அவருக்கு கொரோனாவை காரணம் காட்டி இதுவரை தகுந்த சிகிச்சை அளிக்கப்படாமல் அவருக்கு ஏற்பட்ட காயம் அழுகிய (Septic) நிலைக்கு மாறி மிகுந்த சிரமமான நிலையில் தனியார் மருத்துவமனையில் மிகுந்த பொருட்செலவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது மாவட்டம் முழுவதும் பரவலாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று.கடையநல்லூர் போன்ற ஊர்களில் 15 நாட்களில் எழுபதுக்கும் அதிகமானோர் கொரோனா அல்லாத நோய்களுக்கான முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறந்துள்ளனர். கூடுதலாக கொரோனாவினால் ஏழு பேரும் இறந்துள்ளனர்.தென்காசியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதிய அளவு ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாததால் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலிருந்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு வரும் பெரும்பான்மையான நோயாளிகள் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் உடலளவில் பலவீனமடைந்திருக்கும் நோயாளிகள் மனதளவிலும் பாதிக்கப்பட்டு அங்கேயே மரணமடைந்து விடுகின்றனர்.ஆகவே, தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 அரசு மருத்துவமனைகளிலும் உடனடியாக மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்க வேண்டும். மேலும் ஐந்து அரசு மருத்துமனைகளிலும் உடனடியாக கொரோனா சிறப்பு வார்டுகளை ஏற்படுத்தி அந்தந்த பகுதி கொரானா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அத்தோடு கொரோனா அல்லாத நோய்களுக்காக மருத்துவமையை நாடும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவம் செய்ய சுகாதாரதுறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. அப்போது மாவட்ட பொருளாளர் செய்யது மசூது சாகிபு, துணைச் செயலாளர்கள் அப்துல் சலாம், முகம்மது புகாரி ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.