ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு நெல்லை மாவட்டம் தயார் நிலையில் இருப்பதாகவும் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தை ஒருங்கிணைத்து உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றும், 13 லட்சத்து 57 ஆயிரத்து 163 வாக்காளர்கள் உள்ளதாகவும் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.தமிழக தேர்தல் ஆணையத்தால் ஊரக பகுதிகளில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில் நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் தேர்தலுக்காக 2411 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 6,67,833 பேரும், பெண் வாக்களர்கள் 6,89,291 பேரும் மூன்றாம் பாலினித்தவர் 39 பேர் என மொத்தம் 13,57,163 பேர் உள்ளனர். உள்ளாட்சி தேர்தல்களை நடத்த 41 தேர்தல் அலுவலர்களும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 579 பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான வாக்கு பெட்டிகள் கையிருப்பில் உள்ளது. வாக்கு எண்ணும் மையம் 19 இடங்களில் அமைக்கப்பட உள்ளது. கடந்த தேர்தலில் 67% வாக்குப்பதிவு நடந்துள்ளது.நெல்லை,தென்காசி மாவட்டங்களில் ஒருங்கிணைந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்.நாடாளுமன்ற தேர்தலில் கண்டறியப்பட்ட பதட்டமான வாக்கு சாவடிகள் கண்காணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவுக்கு 18,120 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளதால் ஊரக பகுதிகளில் அரசியல் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.இதனை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனையும் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்சுந்தர் தயாளன், நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்து ராமலிங்கம், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உள்ளிட்ட அரசுத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.