இராமநாதபுரம், ஆக.12 – இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல், வேதியியல் துறை சார்பில் நிலையான வேளாண் விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். ராமநாதபுரம் வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளரும், கடலோர உவர் ஆராய்ச்சி மையத் தலைவருமான வள்ளல் கண்ணன் பேசுகையில், செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், மனித கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாக தவிர்த்து பயிர் சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் நிர்வாகம் பஞ்சகாவியா, மண்புழு உரம் போன்ற இயற்கை சாகுபடி முறைகள் மூலம் விவசாயம் செய்து இன்றைய தலைமுறையினரின் உணவு, உடை தேவையை நிறைவு செய்ய வேண்டும். மகசூலும் மண் வளமும் நேர்விகிதத்தில் உள்ளது. மண் வளத்தை பொறுத்து தான் மகசூல் உள்ளது. இந்திய மண் வளத்தை ஆராய்ந்த சர்வேதேச ஆய்வுக்குழு மண்ணில் இரும்பு, மாலிப்பிடினத்தை தவிர பிற சத்துக்களான பாஸ்பரஸ், மக்னீஷியம், போரான், துத்தநாகம் போன்றவை குறைவாக உள்ளதாக கூறுகின்றது. வளமான மண் இன்று வளம் குன்றிபோனதற்கு விவசாயத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகள், உரங்கள் பயன்படுத்தியதே காரணம் என்றார். கல்லூரி முதல்வர் ராஜசேகர், துறைத் தலைவர்களான ஆனந், இப்ராஹிம் ஆகியோர் பேசுகையில் மக்கள்தொகை உயரும்போது உணவு விளைச்சலும் உயர வேண்டும். இன்றைய விவசாயமனது உழவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதுடன் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன் நுண்ணுயிரியல், வேதியியல் துறை மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்றனர். நுண்ணுயிரியல் துறை முதலாம் ஆண்டு மாணவ அமைப்பாளர் ஷேக் அப்துல் அஜீஸ் வரவேற்றார். மூன்றாம் ஆண்டு மாணவி ஜெசிமா பேகம் நன்றி கூறினார்.
13
You must be logged in to post a comment.