இராமநாதபுரம், செப்.25 – இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்வேறு மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இன்று இணையும் நிகழ்ச்சி நகர் திமுக சார்பில் நடந்தது.
மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: 2021 சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை 2021 மே 7 ல் தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற நாளிலிருந்து நிறைவேற்றினார். அன்றைய தினத்தில் இருந்து அரசு நகர் பேருந்துகளில் கட்டணமின்றி பயணித்து வருகின்றனர். தேர்தல் பிரசாரத்தில் அறிவிக்கப்படாத மகளிர் உயர் கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், பள்ளிகளில் காலை உணவு திட்டம் போன்ற திட்டங்ளையும் செயல்படுத்தி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக செப்.15ல் தொடங்கி வைத்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 1.05 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர். திமுக அங்கம் வகித்துள்ள இந்தியா கூட்டணி மூலம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அரசை விரட்டியப்போம் என்றார். கீழக்கரை மீனவர் குப்பத்தில் மகளிர் உரிமை திட்டத்தில் 100 சதவீதம் பயனடைந்த பெண்கள் 100 க்கும் மேற்பட்டோர் உள்பட மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர். எம்எல்ஏ வுக்கு வீர வாள் பரிசளிக்கப்பட்டது. புதியதாக இணைந்தவர்களுக்கு திமுக உறுப்பினர் அடையாள அட்டைகளை எம்எல்ஏ வழங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ். அஹமது தம்பி, நகர் துணை செயலாளர்கள் எம்.எஸ். ஜெய்னுதீன், எம்.முனீஸ்வரன், பொருளாளர் எம்.சித்திக், மாவட்ட பிரதிநிதி ஜெ.தவ்பீக் ராஜா, ராமநாதபுரம் நகராட்சி துணை தலைவர் டி.ஆர். பிரவீன் தங்கம், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜெ.பிரவீன், அயலக அணி மாவட்ட தலைவர் இப்திகார் ஹசன், துணை தலைவர் ஹனீபா, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கே.என்.நயினார், நகர்மன்ற உறுப்பினர்கள் எஸ்.கே.வி. முஹமது ஹாஜா சுஐபு, எம்.எஸ். சர்ஃப்ராஸ் நவாஸ், பயாஸ், மீரான் அலி, எம்.நஸ்ருதீன், முஹமது காசிம் உள்பட பலர் பங்கேற்றனர். தகவல் தொழில்நுட்ப அணி எம்.ஆனந்தராஜ் நன்றி கூறினார்.
You must be logged in to post a comment.